தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு- லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2022-06-29 09:36 GMT   |   Update On 2022-06-29 10:33 GMT
  • கே.பி.அன்பழகன் தேர்தலின் போது வேட்பு மனுவில் கூறியிருந்த சொத்துக்களின் மதிப்பை வைத்து விசாரணை நடத்தினர்.
  • அப்போது அவர் பெயரிலும், அவரது உறவினர் பெயரிலும் வருமானத்திற்கு அதிகமாக, 11 கோடியே 32 லட்சத்து 95 ஆயிரத்து 755 ரூபாய் சொத்து சேர்த்திருப்பதாக தெரியவந்தது.

சென்னை:

அ.தி.மு.க. ஆட்சி காலத்தின் போது உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் கே.பி.அன்பழகன். தர்மபுரி பாலகோடு தொகுதியில் கடந்த 2001-ம் ஆண்டு முதல் தற்போது வரை எம்.எல்.ஏ. வாக இருந்து வருகிறார். இவர், உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த காலக்கட்டமான 2016-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவிப்பில் ஈடுபட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என கிருஷ்ண மூர்த்தி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இதன்படி தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசார், கே.பி. அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன் மற்றும் மருமகள் வைஷ்ணவி ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

கே.பி.அன்பழகன் தேர்தலின் போது வேட்பு மனுவில் கூறியிருந்த சொத்துக்களின் மதிப்பை வைத்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் பெயரிலும், அவரது உறவினர் பெயரிலும் வருமானத்திற்கு அதிகமாக, 11 கோடியே 32 லட்சத்து 95 ஆயிரத்து 755 ரூபாய் சொத்து சேர்த்திருப்பதாக தெரியவந்தது.

இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில், புகார்தாரரான கிருஷ்ண மூர்த்தி தாக்கல் செய்த மனுவில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தாலும், இதுவரை குற்ற பத்திரிகையை தாக்கல் செய்யவில்லை. எனவே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விரைவாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Tags:    

Similar News