அருப்புக்கோட்டையில் இன்று அரசு பஸ்சில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலி
- தமிழகத்தில் பள்ளி-கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகளுக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் போதிய அளவில் பஸ் இயக்கப்படுவதில்லை.
- கல்லூரிக்கு சென்ற மாணவர் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அருப்புக்கோட்டை:
தமிழகத்தில் பள்ளி-கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகளுக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் போதிய அளவில் பஸ் இயக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனால் கூட்ட நெரிசல் மிகுந்த பஸ்களில் மாணவர்கள் படியில் நின்று பயணம் செய்யும் பரிதாப நிலை உள்ளது.
இந்த பயணம் சில நேரங்களில் ஆபத்தாக முடிந்து உயிரை பலி வாங்குகிறது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இன்று காலை அரசு பஸ்சின் படியில் நின்று பயணம் செய்த கல்லூரி மாணவர் தவறி விழுந்து இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
அருப்புக்கோட்டை அருகே உள்ள வெள்ளையாபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது மகன் மாதேஸ்வரன் (வயது19). இவர் விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். தினமும் மாதேஸ்வரன் அரசு பஸ்சில் கல்லூரிக்கு சென்றுவருவது வழக்கம்.
அதன்படி இன்று காலை அருப்புக்கோட்டையில் இருந்து கூட்டம் அதிகமாக இருந்த அரசு பஸ்சில் மாதேஸ்வரன் ஏறினார். ஆனால் அவரால் பஸ்சுக்குள் செல்ல முடியவில்லை. இதன் காரணமாக பஸ்சின் படியில் கைப்பிடியை பிடித்துக் கொண்டு மிகுந்த சிரமத்துடன் பயணம் செய்தார்.
ஒவ்வொரு பஸ் நிறுத்தத்திலும் அதிக அளவில் பயணிகள் ஏறியதால் பஸ்சில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. பாலவநத்தம் மெயின் ரோட்டில் அரசு பஸ் சென்றபோது படியில் நின்றிருந்த மாதேஸ்வரன் எதிர்பாராதவிதமாக தவறி நடுரோட்டில் விழுந்தார்.
இதில் அவரது தலையில் பின்புறம் பலத்த காயம் ஏற்பட்டு துடிதுடித்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் டிரைவர் மற்றும் நடத்துனரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரிக்கு சென்ற மாணவர் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.