தமிழ்நாடு

குமரி மாவட்டத்தில் 8 மணி நேரம் இடைவிடாது கொட்டிய மழை: மயிலாடியில் 14 சென்டிமீட்டர் மழை பதிவு

Published On 2024-05-23 04:10 GMT   |   Update On 2024-05-23 04:10 GMT
  • பேச்சிப்பாறை அணையில் இருந்து தொடர்ந்து மதகுகள் வழியாகவும் உபரி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
  • கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

நாகர்கோவில்:

தெற்கு கேரளா மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக குமரி மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்றும் மாவட்ட முழுவதும் பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது.

கொட்டாரம், கன்னியாகுமரி, மயிலாடி, சாமிதோப்பு, அஞ்சுகிராமம் பகுதிகளில் இரவு 10 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை இடைவிடாது இன்று காலை 6 மணி வரை தொடர்ச்சியாக 8 மணி நேரம் பெய்தது. அதன் பிறகும் காலையில் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது.

மாவட்டத்தில் அதிகபட்ச மழை மயிலாடியில் பெய்துள்ளது. அங்கு 14 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. கனமழையின் காரணமாக அந்த பகுதிகளில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் பெரும்பாலான பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.

நாகர்கோவிலிலும் நேற்று இரவு மழை பெய்தது. இன்று காலையில் வானம் மப்பும் மந்தாரமாக காணப்பட்டது. அவ்வப்போது மழை கொட்டியது. கன்னிமார், ஆரல்வாய்மொழி, பூதப்பாண்டி, பாலமோர், தக்கலை, இரணியல், திருவட்டார், குளச்சல், குருந்தன்கோடு, களியல், சுருளோடு மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது.

மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும், அணை பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளுக்கு கணிசமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணைகளின் நீர்மட்டத்தை கண்காணித்து வருகிறார்கள்.

பேச்சிப்பாறை அணையில் இருந்து தொடர்ந்து மதகுகள் வழியாகவும் உபரி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு வரக்கூடிய தண்ணீருக்கு ஏற்ப தண்ணீரை கூடுதலாக வெளியேற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் குழித்துறை தாமிரபரணி ஆறு மற்றும் கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

குழித்துறை சப்பாத்து பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது. கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவியில் குளிப்பதற்கான தடை இன்று 4-வது நாளாக தடை நீடிக்கிறது. திற்பரப்பு அருவி அருகே உள்ள சிறுவர் பூங்காவை மூழ்கடித்து தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.


ஈத்தாமொழி மணியன்விளை பகுதியில் மரம் முறிந்து விழுந்ததால் பஸ்கள் திருப்பி விடப்பட்டது. அப்போது பஸ் ஒன்று அந்த பகுதியில் உள்ள பள்ளத்தில் சிக்கிய காட்சி.

பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 45.25 அடியாக உள்ளது. அணைக்கு1,239 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 636 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாகவும், 520 கன அடி தண்ணீர் உபரி நீராகவும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 51.30 அடியாக உள்ளது. அணைக்கு 678 கன அடிதண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றார் அணைகளின் நீர்மட்டம் 12 அடியை கடந்ததையடுத்து கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 2 அடி உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் இன்று காலை 2.70 அடியாக உள்ளது.

சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியில் மரம் முறிந்து விழுந்தது. கோணம், பறக்கை பகுதிகளில் மரங்கள் முறிந்து மின்கம்பங்கள் மீது விழுந்தன. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினார்கள்.

தொடர் மழைக்கு நேற்று முன்தினம் 7 வீடுகள் இடிந்து இருந்த நிலையில் நேற்று மேலும் 5 வீடுகள் இடிந்துள்ளது. கீரிப்பாறை, குலசேகரம், தடிக்காரன்கோணம், தோவாளை, செண்பகராமன் புதூர் பகுதிகளில் ரப்பர் பால் மற்றும் செங்கல் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News