தமிழ்நாடு செய்திகள்

கோவை- நீலகிரியில் கனமழை: 10 இடங்களில் மண் சரிவு- மரங்கள் முறிந்ததால் போக்குவரத்து பாதிப்பு

Published On 2023-11-23 10:49 IST   |   Update On 2023-11-23 10:49:00 IST
  • கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
  • மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரெயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் வருகிற 25-ந் தேதி மலை ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.

கோவை:

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக கோவை, நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது.

நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு திடீரென கனமழை பெய்யத் தொடங்கியது. இரவு விடிய, விடிய மழை பெய்தது. குன்னூர், கோத்தகிரி பகுதியில் மழை வெளுத்து வாங்கியது. ரோட்டில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. நடுரோட்டில் மரங்களும் முறிந்து விழுந்தன.

இதன் காரணமாக குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து தடைபட்டது. சாலையின் இருபுறமும் பல மணி நேரம் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றன.

அந்த சாலையில் அரசு போக்குவரத்து கழக பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. அவர்கள் மாற்று வாகனங்கள் மூலம் ஊருக்கு சென்றனர். அதிகபட்சமாக கீழ் கோத்தகிரியில் 24.1 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. தொடர் மழையால் நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், காரமடை பகுதியில் நேற்று இரவு விடிய, விடிய கனமழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக மேட்டுப்பாளையத்தில் 37.3 சென்டி மீட்டர் மழை பதிவானது. மழை காரணமாக காரமடை ஒன்றியத்தில் உள்ள மேட்டுப்பாளையம் உள்பட 193 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது.

சிக்காரம்பாளையம் கண்ணார்பாளையம், கருப்பராயன் நகர், பெள்ளாதி, சென்னம்பாளையம், பட்டக்காரனூர், ஏழுஎருமை பள்ளம் ஆகிய தடுப்பணைகள் நிரம்பி காட்டாற்று வெள்ளம் போல் கிராம சாலைகளை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரெயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் வருகிற 25-ந் தேதி மலை ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.

Tags:    

Similar News