அரசு பஸ்சில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
- வெடிகுண்டு செயலிழப்பு போலீசார் துப்பறியும் மோப்ப நாய் மூலம் சித்தோடு நால்ரோடு பகுதியில் வந்த பஸ்களை நிறுத்தி சோதனை செய்தனர்.
- கட்டுப்பாட்டு அறைக்கு வந்த போன் நம்பரை போலீசார் ஆய்வு செய்தனர்.
ஈரோடு:
சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு ஒருவர் போன் செய்தார். அதில் பேசிய நபர் ஈரோட்டில் இருந்து சித்தோடு செல்லும் அரசு பஸ்சில் பையில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் அது சில நேரத்தில் வெடித்து விடும் என்று கூறி தொடர்பை துண்டித்தார்.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உயர் அதிகாரிகள் உஷார் படுத்தப்பட்டு சித்தோடு போலீசார் சித்தோடு நால்ரோடு பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும் வெடிகுண்டு செயலிழப்பு போலீசார் துப்பறியும் மோப்ப நாய் மூலம் சித்தோடு நால்ரோடு பகுதியில் வந்த பஸ்களை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்தது.
இதையடுத்து கட்டுப்பாட்டு அறைக்கு வந்த போன் நம்பரை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அந்த போன் சேலம் எருமாபாளையம் ரோடு, நேதாஜி தெருவை காட்டியது. இதையடுத்து அங்கு சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ஜமால்தீன் (37) என்ற வாலிபர்தான் சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது.
இதையடுத்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து ஜமால்தீனை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.