தமிழ்நாடு

மேலப்பாளையம் சந்தையில் ஆடுகள் விற்பனை ஜோர்- ரூ.30 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட கிடா

Published On 2023-03-28 08:42 GMT   |   Update On 2023-03-28 08:42 GMT
  • பங்குனி உத்திரத்தையொட்டி ஏராளமானோர்கள் கோவில்களில் ஆடுகளை நேர்த்தி கடன் கொடுத்து வழிபடுவார்கள்.
  • பங்குனி உத்திரம் நெருங்குவதையொட்டி இன்று மேலப்பாளையம் சந்தையில் ஆடுகளை வாங்குவதற்காக ஏராளமானோர் குவிந்தனர்.

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் முக்கூடல், வள்ளியூர், மேலப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் கால்நடை சந்தைகள் செயல்பட்டு வருகிறது.

இதில் மேலப்பாளையம் சந்தை ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறுகிறது. இங்கு ஆடுகள் மட்டுமல்லாது மாடு, கோழி, கருவாடு உள்ளிட்டைவைகளும் விற்பனை செய்யப்படுவது வழக்கம்.

இதனை வாங்க ஏராளமான வியாபாரிகளும், பொதுமக்களும் திரள்வார்கள். இதனால் வாரந்தோறும் கோடிக்கணக்கில் விற்பனை நடைபெறும். ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்துமஸ், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் கூடுதலாக விற்பனை நடைபெறும்.

இந்நிலையில் பங்குனி உத்திரத்தையொட்டி ஏராளமானோர்கள் கோவில்களில் ஆடுகளை நேர்த்தி கடன் கொடுத்து வழிபடுவார்கள். பங்குனி உத்திரம் நெருங்குவதையொட்டி இன்று மேலப்பாளையம் சந்தையில் ஆடுகளை வாங்குவதற்காக ஏராளமானோர் குவிந்தனர்.

இதற்காக நேற்று இரவு முதலே வியாபாரிகள் தங்களது ஆடு, மாடுகளுடன் சந்தைக்கு வந்தனர். இன்று வியாபாரிகள், பொதுமக்கள் என சுமார் 2 ஆயிரம் பேர் சந்தையில் குவிந்தனர். இதனால் பரபரப்பாக காணப்பட்டது. மேலும் விற்பனைக்காக சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் கொண்டு வரப்பட்டது. அவை தரத்திற்கு ஏற்ப ரூ.5 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்பனையானது. கிடா வகை ஆடுகள் ரூ.30 ஆயிரத்திற்கு விற்பனையானது.

இதனால் மேலப்பாளையம் சந்தை இன்று களைகட்டி காணப்பட்டது.

Tags:    

Similar News