மாமல்லபுரத்தில் மாரத்தான் போட்டிக்கு பயிற்சி எடுக்கும் வெளிநாட்டவர்கள்
- வெளிநாட்டு பயணிகள் இங்கு தங்கியிருந்து கடலோர மணலில் சூரிய குளியல், யோகா, கடலில் அலைச்சறுக்கு விளையாட்டு என பொழுது போக்குவது வழக்கம்.
- கொரியா மற்றும் சீனாவை சேர்ந்தவர்கள் மாரத்தான் போட்டியில் பங்கேற்க குடும்பத்துடன் மாமல்லபுரம் வந்து காலையில் ஓட்டப்பயிற்சி செய்து வருகின்றனர்.
மாமல்லபுரம:
மாமல்லபுரம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் சர்வதேச புராதன சின்னங்களை கொண்ட ஒரு கடலோர சுற்றுலா நகரமாகும்.
வெளிநாட்டு பயணிகள் இங்கு தங்கியிருந்து கடலோர மணலில் சூரிய குளியல், யோகா, கடலில் அலைச்சறுக்கு விளையாட்டு என பொழுது போக்குவது வழக்கம்.
சமீபத்தில் மாமல்லபுரத்தில் நடந்து முடிந்த, சர்வதேச "செஸ் ஒலிம்பியாட்" போட்டிக்கு பிறகு ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர், சோழிங்க நல்லூர், துரைப்பாக்கம் பகுதிகளில் வேலை செய்யும் கொரியா மற்றும் சீனாவை சேர்ந்தவர்கள் மாரத்தான் போட்டியில் பங்கேற்க குடும்பத்துடன் மாமல்லபுரம் வந்து காலையில் ஓட்டப்பயிற்சி செய்து வருகின்றனர்.
இவர்களிடம் நகரத்தில் ஆடம்பரமான வசதிகள் இருந்தும், 60கி.மீ தூரம் பயணித்து இங்கு வந்து பயிற்சி எடுக்க என்ன காரணம்? என்று கேட்டபோது, "இது உலக புகழ் பெற்ற புராதன யுனஸ்கோ நகரம், கடல் காற்றின் சுவாசம் உடலுக்கு ஆரோக்கியமாகவும், மனதிற்கு அமைதியாகவும் இருக்கிறது, முக்கியமாக எங்களுக்கு பாதுகாப்பாக உள்ளது. வாரத்தில் ஒருநாள் 2 மணி நேரம் இப்படி நிதானமாக ஓடி பயிற்சியில் ஈடுபடுகிறோம்" என்றனர்.