தமிழ்நாடு

சென்னையில் 3 தொகுதிகளில் தேர்தல் ஏற்பாடுகள் தயார்-ராதாகிருஷ்ணன்

Published On 2024-04-17 10:06 GMT   |   Update On 2024-04-17 10:06 GMT
  • தேர்தல் பணியில் 19,419 அதிகாரிகள் ஈடுபடுகிறார்கள்.
  • அனைத்து வாக்குச் சாவடிகளும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

சென்னை:

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வாக்குப் பதிவு எந்திரங்கள் கணினி முறையில் ஒவ்வொரு பகுதிகளுக்கும் பிரிக்கப்பட்டது. மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடந்தது.

சென்னையில் 3 தொகுதிகளுக்கும் 11,843 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 4469 கட்டுப்பாட்டு எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. நாளை காலையில் ஒவ்வொரு தொகுதிக்கும் எந்தெந்த வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்குச்சாவடி வாரியாக அனுப்புவதற்கு குலுக்கல் முறையில் ஒதுக்கப்படுகிறது.

3,726 வாக்குச் சாவடிகளுக்கும் ஜி.பி.எஸ். கருவி பொருத்திய வாகனத்தில் எந்திரங்கள், பிற உபகரணங்கள், பொருட்கள் அனுப்பப்படுகின்றன. தேர்தல் பணியில் 19,419 அதிகாரிகள் ஈடுபடுகிறார்கள்.

அனைத்து பணிகளும் இரவு பகலாக நடந்து வருகிறது. தேர்தல் நடத்த தயார் நிலையில் இருக்கிறோம். 19-ந்தேதி வாக்களிக்க பொதுமக்கள் தயாராக வர வேண்டும், அடுக்குமாடி குடியிருப்பு மக்கள், ஏழை-எளிய மக்கள் எளிதாக ஓட்டுப்பதிவு செய்ய வழி வகை செய்யப்பட்டுள்ளது.

காவல் துறையுடன் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடும் செய்யப்பட்டு உள்ளது. பதட்டமான 708 வாக்குச் சாவடிகளில் கூடுதலாக போலீஸ் குவிக்கப்படுகிறது. அனைத்து வாக்குச் சாவடிகளும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. 65 சதவீத வாக்குச் சாவடிகளில் வெப் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது.

தேர்தலை சுமூகமாக நடத்த 708 நுண் பார்வையாளர்கள் பதட்டமான வாக்குச் சாவடிகளை கண்காணித்து அறிக்கை தருவார்கள். வாக்குச் சாவடி மையங்களில் பந்தல், குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.

வாக்குப்பதிவு மையங்களில் கூட்டம் இருந்தாலும் காத்திருந்து பதிவு செய்யுங்கள். வாக்களிப்பில் நமது கடமை, உரிமை.

வாக்காளர்கள் 12 வகையான அடையாள அட்டையில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தலாம். ஒவ்வொரு வாக்குச் சாவடிகளிலும் பொதுமக்களுக்கு உதவ "பெசிலிட்டி பூத்" ஒன்று அமைக்கப்படுகிறது. உங்கள் பெயரை சொன்னால் போதும், எந்த பூத்தில் ஓட்டு இருக்கிறது, எங்கு ஓட்டு போடலாம் என்று விவரமாக சொல்வார்கள்.

பூத் சிலிப் 86 சதவீதம் வீடு வீடாக கொடுக்கப்பட்டு உள்ளது. நாளை வரை கொடுப்பார்கள். நாளை மதியத்திற்கு மேல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு சாவடிகளுக்கு கொண்டு செல்லப்படும். 899 செக்டார் ஜோனல் பார்ட்டி இதனை பாதுகாப்பாக கொண்டு போய் சேர்ப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News