தமிழ்நாடு செய்திகள்

நாகரில் தாறுமாறாக ஓடிய பஸ்சால் பரபரப்பு- குடிபோதையில் இருந்த டிரைவர் சஸ்பெண்டு

Published On 2023-06-14 11:33 IST   |   Update On 2023-06-14 11:33:00 IST
  • வடசேரி பஸ்நிலையத்தில் இருந்து காட்டுப்புதூருக்கு நேற்று இரவு அரசு பஸ் புறப்பட்டது.
  • போக்குவரத்து நிர்வாகம், துறை ரீதியாக விசாரணை நடத்தி டிரைவரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டது.

நாகர்கோவில்:

நாகர்கோவில் வடசேரி பஸ்நிலையத்தில் இருந்து காட்டுப்புதூருக்கு நேற்று இரவு அரசு பஸ் புறப்பட்டது. இந்த பஸ் அசம்பு ரோட்டில் சென்ற போது, திடீரென தாறுமாறாக ஓடியது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் பயத்தில் அலறினர்.

கடைசி நேர பஸ் என்பதால் பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்கள் டிரைவரிடம் பஸ்சை நிறுத்துங்கள்... என கூச்சலிட்டனர். இதனை தொடர்ந்து அவர் பஸ்சை நடுவழியில் நிறுத்தினார். அப்போது தான் டிரைவர் போதையில் இருப்பது தெரியவர பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் பஸ்சை விட்டு இறங்கினர்.

இதுபற்றி வடசேரி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து, பஸ் டிரைவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட சோதனையில் பஸ் டிரைவர் மது அருந்தி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையில் போக்குவரத்து நிர்வாகம், துறை ரீதியாக விசாரணை நடத்தி டிரைவரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டது.

Tags:    

Similar News