தமிழ்நாடு

மகா சிவராத்திரியை முன்னிட்டு திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம்- லட்சக்கணக்கானோர் சாமி தரிசனம்

Published On 2024-03-09 05:36 GMT   |   Update On 2024-03-09 05:39 GMT
  • கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்கம் உள்ளிட்ட கோவில்களில் கிரிவல பக்தர்கள் தரிசனம் செய்து சென்றனர்.
  • கிரிவலப்பாதையில் பல இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.

வேங்கிக்கால்:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

நேற்று இரவு முழுவதும் அருணாசலேஸ்வரர் கோவில் நடை திறக்கப்பட்டிருந்ததால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

அருணாசலேஸ்வரர் கோவில் கருவறையின் மேற்கு திசையில் அமைந்துள்ள லிங்கோத்பவருக்கு நள்ளிரவு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.

இதனை தொடர்ந்து தாழம்பூ சாத்தப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பல லட்சம் பக்தர்கள் ஓம் நமசிவாய எனும் சிவ மந்திரத்தை உச்சரித்தவாரே பக்தி பரவசத்துடன் 14 கிலோ மீட்டர் தூரம் உள்ள அண்ணாமலையை வலம் வந்து வணங்கினர்.

கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்கம் உள்ளிட்ட கோவில்களில் கிரிவல பக்தர்கள் தரிசனம் செய்து சென்றனர்.

கிரிவலப்பாதையில் பல இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஒரே இரவில் பல லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் வந்ததால் நகரின் பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தெருக்களிலும், சாலையோரங்களில் 4 சக்கர வாகனத்தை நிறுத்தி சென்ற வெளியூர் பக்தர்கள் மற்றும் ஆட்டோ டிரைவர்களால் சில இடங்களில் போக்குவரத்து தடையும் ஏற்பட்டது.

திருவண்ணாமலை நகராட்சி ஈசான்ய மைதானத்தில் அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் நடைபெற்ற 12 மணி நேர சிவராத்திரி விழாவை உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி கிரிவலம் வந்த பக்தர்களும் கண்டு ரசித்தனர்.

மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு நகர் முழுவதும் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

Similar News