தமிழ்நாடு செய்திகள்

திருப்பூர் அருகே கார்கள் மோதி விபத்து- கைக்குழந்தையுடன் தி.மு.க., கவுன்சிலர் பலி

Published On 2023-11-13 14:17 IST   |   Update On 2023-11-13 14:18:00 IST
  • இந்துமதி பலத்த காய மடைந்து உயிருக்கு போராடினார்.
  • விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர்:

கோவை போத்தனூர் செட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 27). தி.மு.க.வை சேர்ந்த இவர் செட்டிப்பாளையம் ஊராட்சி 10-வது வார்டு கவுன்சிலராக இருந்தார். இவரது மனைவி இந்துமதி (23). இவர்களுக்கு கஜோல் என்ற 6 மாத கைக்குழந்தை உள்ளது.

இந்தநிலையில் நேற்றிரவு சந்தோஷ்குமார் தனது மனைவி, குழந்தையுடன் ஈரோட்டில் உள்ள ஒரு கோவிலுக்கு செல்வதற்காக காரில் புறப்பட்டார். காரை அவரே ஓட்டினார். திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் ஈட்டிவீரம்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் போது பின்னால் வந்த சொகுசு கார், சந்தோஷ்குமார் காரின் பின்புறம் பயங்கர வேகத்தில் மோதியது. இதில் கார் சாலையின் நடுவில் உள்ள டிவைடரில் மோதியது.

இந்த விபத்தில் காரில் இருந்த சந்தோஷ்குமார், கைக்குழந்தை கஜோல் ஆகிய 2பேரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்துமதி பலத்த காய மடைந்து உயிருக்கு போராடினார். நள்ளிரவு நேரம் என்பதால் மீட்புப்பணியில் தாமதம் ஏற்பட்டது.

இந்தநிலையில் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பெருமாநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் காயமடைந்த இந்துமதியை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் சொகுசு காரில் வந்த 5பேர் காயமடைந்தனர். அவர்கள் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலுக்கு சென்ற போது தி.மு.க. கவுன்சிலர் தனது கைக்குழந்தையுடன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News