தமிழ்நாடு

கொல்லங்கோடு அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.1 கோடி இழந்த சினிமா கேமராமேன் தற்கொலை

Published On 2023-06-03 05:30 GMT   |   Update On 2023-06-03 08:35 GMT
  • ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த, சினிமா ஒளிப்பதிவாளர் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  • தற்கொலை செய்த தேவதாசனுக்கு மனைவியும் 2 பிள்ளைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொல்லங்கோடு:

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள மார்த்தாண்டம்துறை கோவில் விளாகம் பகுதியை சேர்ந்தவர் ஹவுசேப்பு. இவரது மகன் தேவதாசன் (வயது 40).

இவர் சினிமா துறையில் ஒளிப்பதிவாளர் மற்றும் எடிட்டர் ஆக பணியாற்றி உள்ளார். கோவையில் தங்கி இருந்து திரைப்படத்துறையில் செயலாற்றி உள்ளார்.

இந்த நிலையில் தேவதாசனுக்கு, ஆன்லைன் சூதாட்டம் மேல் நாட்டம் ஏற்பட்டுள்ளது. பொழுது போக்காக விளையாட தொடங்கிய இவர், நாளடைவில் இந்த விளையாட்டுக்கு அடிமையானார்.

இதனால் சம்பாதித்த பணத்தை அதில் இழந்துள்ளார். இருப்பினும் அவரால் ஆன்லைன் சூதாட்டத்தை விட முடியவில்லை. பெரும் பண கஷ்டத்திற்கு ஆளான தேவதாசன், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார்.

இங்கு குடும்பத்துடன் தங்கிய அவர், ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.1 கோடியே 10 லட்சம் இழந்து விட்டதாக குடும்பத்தினரிடமும் உறவினர்களிடமும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் தொடர்ந்து ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டுள்ளார்.

இதனை பலரும் கண்டித்துள்ளனர். பணம் இழந்த வேதனையாலும், ஆன்லைன் சூதாட்டத்தை விட முடியாததாலும் மன வேதனையில் தேவதாசன் இருந்துள்ளார். இந்தநிலையில் அவர் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுதொடர்பான தகவல் கிடைத்ததும் கொல்லங்கோடு போலீசார் சம்பவ இடம் சென்று உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். தேவதாசன் உடல் பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த, சினிமா ஒளிப்பதிவாளர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலை செய்த தேவதாசனுக்கு மனைவியும் 2 பிள்ளைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News