தமிழ்நாடு செய்திகள்

தண்ணீருக்குள் இறங்கி சடலத்தை சுமந்து சென்று அடக்கம் செய்யும் மக்கள்

Published On 2024-01-27 11:04 IST   |   Update On 2024-01-27 11:04:00 IST
  • மழை காலங்கள் இல்லாத சமயங்களில் அந்த பகுதியில் உள்ள ஓடையின் ஓரமாக எளிதாக சென்று இறந்தவர்களின் சடலங்களை எரித்து வந்தனர்.
  • மயான வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று மந்தை பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள மைக்கேல்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மந்தை பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதி மக்களுக்கு மயான வசதி இல்லை என கூறப்படுகிறது.

இந்த மந்தை பகுதியில் ஓடை ஒன்று அமைந்துள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர்கள் இறந்தால் அவர்களை சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஓடை வழியாக சுமந்து சென்று அந்த பகுதியில் உள்ள காலி இடங்களில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்தும் எரித்தும் வருகிறார்கள்.

மழை காலங்கள் இல்லாத சமயங்களில் அந்த பகுதியில் உள்ள ஓடையின் ஓரமாக எளிதாக சென்று இறந்தவர்களின் சடலங்களை எரித்து வந்தனர்.

வரட்டுபள்ளம் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மந்தை ஓடை வழியாக செல்கிறது. அதே போல் அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படும் நேரங்கள் மற்றும் பாசன வசதிக்காக தண்ணீர் திறக்கப்படும் போது மந்தை ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து சென்று வருகிறது.

அப்படி மந்தை ஓடையில் தண்ணீர் செல்லும் போது அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இறந்தால் ஓடை தண்ணீரில் இறங்கி இறந்தவரின் பிணத்தை சுமந்து கொண்டு சென்று உடலை அடக்கம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.

இந்த நிலையில் வரட்டு பள்ளம் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் மந்தை ஓடையில் அதிகளவில் தண்ணீர் செல்கிறது.

இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் இறந்து விட்டார். இதையடுத்து இறந்தவரின் உடலை அப்பகுதி மக்கள் தண்ணீருக்குள் இறங்கி சிரமப்பட்டு சுமந்து சென்று அக்கறையில் எரியூட்டி விட்டு வந்தனர். இதே நிலை தான் நீண்ட காலமாக உள்ளது.

எனவே இந்த பகுதியை சேர்ந்தவர் இறந்தால் அடக்கம் செய்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

எனவே இந்த பகுதிக்கு மயான வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று மந்தை பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News