தமிழ்நாடு செய்திகள்

தொல்பொருள் அருங்காட்சியகத்தில் அன்புமணி ஆய்வு


அரியலூர் மாவட்டத்தில் 2-வது நாளாக நடைபயணம்- தொல்பொருள் அருங்காட்சியகத்தில் அன்புமணி ஆய்வு

Published On 2022-10-30 11:53 IST   |   Update On 2022-10-30 11:53:00 IST
  • சோழர் பாசன திட்டத்தை உடனடியாக அரசு நிறைவேற்ற வேண்டும்.
  • அரியலூர் வாரணவாசியில் உள்ள பழமையான தொல்பொருள் அருங்காட்சியகத்தை பார்வையிட்டார்.

திருமானூர்:

சோழர்கால பாசன திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அரியலூர் மாவட்டத்தில் 2 நாட்கள் நடைபயணத்தை நேற்று கீழப்பழுவூரில் தொடங்கினார்.

அப்போது, சோழர் பாசன திட்டத்தை உடனடியாக அரசு நிறைவேற்ற வேண்டும், பொன்னேரியில் இருந்தும், பொன்னாற்றில் இருந்தும் நீர் வரும். ஒவ்வொரு ஆறுகளும் நீரினால் நிரம்பியிருக்க வேண்டும். அதற்கு ஏரிகளை தூர்வாரியிருக்க வேண்டும். அவ்வாறு தூர்வாரியிருந்தால் அரியலூர் மாவட்டம் வளம் பெற்று, பொருளாதாரத்தில் முன்னேறி இருக்கும். கரைவெட்டி சரணாலயம் சுற்றுலாத்தலமாக மாறும். நான் வந்தால் அனைத்தையும் முடித்துவிட்டு செல்வேன் என்றார்.

இன்று 2-ம் நாளாக அரியலூரில் அவர் நடைபயணத்தை தொடங்கினார், அரியலூர், வாலாஜாநகரம், அஸ்தினாபுரம், வி.கைகாட்டி, தத்தனூர், உடையார்பாளையம், கச்சிபெருமாள், துலாரங்குறிச்சி, சூரியமணல், ஜெயங்கொண்டம், ஆமநத்தம் தோண்டி, கங்கைகொண்டசோழபுரம், மீன்சுருட்டி, கண்டமங்கலம் வழியாக கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் நிறைவு பெறுகிறது.

முன்னதாக அவர் அரியலூர் வாரணவாசியில் உள்ள பழமையான தொல்பொருள் அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். அப்போது 242 உயிரினங்களின் படிமங்களில் 10 மட்டுமே பாதுகாக்கப்பட்டு வருவது குறித்த கேட்டார். அதற்கு புவியியல் ஆய்வாளர் சந்திரசேகர் விளக்கம் அளித்தார்.

இந்நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்க அனைத்து பிரிவு பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

Similar News