தமிழ்நாடு

கார் ஒன்று செல்வதை படத்தில் காணலாம்.


5 நாட்களுக்கு பிறகு தெப்பக்காடு தரைப்பாலத்தில் போக்குவரத்து தொடங்கியது

Published On 2022-08-14 07:19 GMT   |   Update On 2022-08-14 07:19 GMT
  • நீலகிரி மாவட்டத்தில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக மழை பெய்தது.
  • நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மாயாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக மழை பெய்தது. இதன் காரணமாக ஆறுகள் மற்றும் நீரோடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மாயாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், கூடலூர்-மசினகுடி இடையே உள்ள தெப்பக்காடு தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதனால் அந்த பகுதியில் உடனடியாக போக்குவரத்து தடை விதிக்கப்பட்டது.

இதன் காரணமாக தெப்பக்காடு பகுதிக்கு போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இந்த பகுதி வழியாக கேரளா, கர்நாடகாவில் இருந்தும் அதிகளவில் வாகனங்கள் வருவது வழக்கம். தடை விதிக்கப்பட்டதால் அவர்களும் பல கிலோ மீட்டர் சுற்றி ஊட்டி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு வந்தது. இதுதவிர எந்தவித போக்குவரத்தும் இல்லாததால் தெப்பக்காடு மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட அருகே உள்ள பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலையும் இருந்தது. இதனால் பெரும் சிரமத்தை சந்தித்த மக்கள் தங்களுக்கு மாற்று வழி ஏற்படுத்தி தர வேண்டும் என கேட்டனர்.

இந்த நிலையில் மாவட்டத்தில் தற்போது மழை குறைந்துள்ளதாலும், மாயாற்றில் வெள்ளம் குறைந்து காணப்படுவதாலும் இன்று 5 நாட்களுக்கு பிறகு உள்ளூர் போக்குவரத்திற்கு மட்டும் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து உள்ளூர் பொதுமக்கள் மட்டும் தங்கள் வாகனங்களில், அருகே உள்ள பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

Similar News