தமிழ்நாடு செய்திகள்

ஜேடர்பாளையத்தில் குடிசைக்கு தீ வைத்ததாக கைது செய்யப்பட்ட 2 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2023-03-21 11:20 IST   |   Update On 2023-03-21 11:20:00 IST
  • ஜேடர்பாளையம் பகுதியில் இருந்து கைதான 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், இப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.
  • ஜேடர்பாளையம் பகுதியில் கொரோனா தொற்று குறித்த சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே சரளைமேட்டை பகுதியில் உள்ள வெல்லம் தயாரிக்கும் ஆலை, அங்கு பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த குடிசைகளுக்கு கடந்த 16-ந் மாலை மர்ம நபர்கள் தீ வைத்தனர்.

இதேபோல் வடகரையாத்தூர் ஊராட்சி வி.புதுப்பாளையத்தில் இருந்த வெல்லம் தயாரிக்கும் ஆலை, வடமாநிலத் தொழிலாளர்களின் குடிசைகளுக்கும் தீ வைக்கப்பட்டது.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த ஜேடர்பாளையம் போலீசார், அதே பகுதியை சேர்ந்த 6 பேரை கைது செய்தனர். அவர்களை பரமத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிபதியின் உத்தரவின் பேரில் சேலம் மத்திய சிறைக்கு அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதற்காக, 6 பேருக்கும் மருத்துவ பரிசோதனை மற்றும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் பிரபு (வயது 27), பிரகாஷ் (29) ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து, இருவரும் சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா மருத்துவ சிகிச்சை சிறப்பு பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஜேடர்பாளையம் பகுதியில் இருந்து கைதான 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், இப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். மேலும் ஜேடர்பாளையம் பகுதியில் கொரோனா தொற்று குறித்த சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News