புயல், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை- 6 மாவட்டத்திற்கு பேரிடர் மீட்பு படை விரைவு
- அந்தமான் அருகே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மாண்டஸ் புயலாக வலுபெற்று 8-ந் தேதி தமிழக கரையை கடக்கும்
- புதுச்சேரிக்கு 3 படை குழுவினரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை மேற்கொள்ள கமாண்டன்ட் அருண் உத்தரவின் பேரில் விரைந்து சென்றனர்.
அரக்கோணம்:
அந்தமான் அருகே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மாண்டஸ் புயலாக வலுபெற்று 8-ந் தேதி தமிழக கரையை கடக்கும். அப்போது கடலோர மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை, தஞ்சை, கடலூர் உள்ளிட்ட 6 மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படை பிரிவில் இருந்து 6 குழுக்கள் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, சென்னை ஆகிய மாவட்டத்திற்கு 25 பேர் கொண்ட மீட்புப் படை வீரர்கள் சென்றனர்.
மேலும் புதுச்சேரிக்கு 3 படை குழுவினரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை மேற்கொள்ள கமாண்டன்ட் அருண் உத்தரவின் பேரில் விரைந்து சென்றனர்.
அங்கு அவர்கள் புயல் மழை எச்சரிக்கை முன்னேற்பாடு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.