தமிழ்நாடு

கடற்கரையில் ஒதுங்கிய இலங்கை பைபர் படகு: கடத்தல்காரர்கள் ஊடுருவலா? உளவுத்துறை போலீசார் தீவிர விசாரணை

Published On 2023-10-10 09:46 GMT   |   Update On 2023-10-10 09:46 GMT
  • ஆற்றுவாய் பகுதியில் நின்றிருந்த படகை போலீசார் சோதனையிட்டபோது அந்த படகு இலங்கை மன்னார் பகுதியை சேர்ந்தது என தெரியவந்தது.
  • இலங்கை மன்னார் பகுதி படகில் வந்திறங்கிய இருவர் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

மண்டபம்:

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை ஆற்றுவாய் பகுதியில் இன்று காலை 8 மணியளவில் பைபர் படகு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி மரைன் மற்றும் மண்டபம் போலீசார், உளவு பிரிவினர் அங்கு விரைந்து வந்தனர். ஆற்றுவாய் பகுதியில் நின்றிருந்த படகை போலீசார் சோதனையிட்டபோது அந்த படகு இலங்கை மன்னார் பகுதியை சேர்ந்தது என தெரியவந்தது.

இந்த படகு மூலம் கடத்தல்காரர்கள் அல்லது இலங்கை அகதிகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊடுருவியிருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் உளவுத்துறை போலீசார் படகில் வந்தவர்கள் யார்? என தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனால் வேதாளை கிராம பகுதியில் பரபரப்பு நிலவி உள்ளது

ராமநாதபுரம் அருகே பெருங்குளம் பகுதியில் நேற்று இலங்கைக்கு கடத்த இருந்த வலி நிவாரணி மாத்திரைகள், பூச்சி கொல்லி மருந்து பாட்டில்கள் பிடிப்பட்ட நிலையில், இலங்கை மன்னார் பகுதி படகில் வந்திறங்கிய இருவர் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

Tags:    

Similar News