தமிழ்நாடு

மகனை கடித்த நல்லபாம்புடன் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த கொத்தனார்.

திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு மகனை கடித்த நல்லபாம்புடன் சிகிச்சைக்கு வந்த கொத்தனார்

Published On 2023-08-24 09:39 GMT   |   Update On 2023-08-24 09:39 GMT
  • பள்ளிக்கு செல்வதற்காக தர்மராஜ் புறப்பட்டுக் கொண்டு இருந்தான்.
  • டாக்டரிடம் காண்பிக்கவே பாம்பை கையில் எடுத்து வந்ததாக சிறுவனின் தந்தை தெரிவித்தார்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் அடுத்த பழைய கன்னிவாடி கே. குரும்பபட்டியை சேர்ந்தவர் செல்வம். கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் தர்மராஜ் (வயது 8). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறான்.

இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு செல்வதற்காக தர்மராஜ் புறப்பட்டுக் கொண்டு இருந்தான். அப்போது வீட்டில் பதுங்கி இருந்த நல்ல பாம்பு சிறுவனின் கால் கட்டை விரலில் கடித்தது. இதனால் சிறுவன் கூச்சலிட்டான். மகனின் அலறல் சத்தம் கேட்டு வந்த தந்தை செல்வம் 4 அடியில் நல்லபாம்பு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனே அந்த பாம்பை அடித்து கையோடு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு மகனுடன் சிகிச்சைக்கு வந்தார். இதனை பார்த்ததும் ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த டாக்டர்கள், நர்சுகள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனையடுத்து சிறுவன் தர்மராஜ்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தனது மகனை கடித்த பாம்பு எந்த வகையை சேர்ந்தது என டாக்டரிடம் காண்பிக்கவே பாம்பை கையில் எடுத்து வந்ததாக சிறுவனின் தந்தை தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து கன்னிவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News