தமிழ்நாடு செய்திகள்

தமிழக ஆளுநரை திரும்ப பெற கோரி கோர்ட்டில் வழக்கு தொடரப்படும்- ஆர்.எஸ்.பாரதி

Published On 2022-11-10 09:30 IST   |   Update On 2022-11-10 09:30:00 IST
  • தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ரவி பா.ஜ.க.காரர்களைப் போல பேசி வருகிறார்.
  • பெரும்பாலான அ.தி.மு.க.வினர் தி.மு.க.விற்கு வந்து கொண்டிருப்பதால் விரைவில் எடப்பாடி பழனிசாமியே வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

திருப்பூர்:

திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசியதாவது:-

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய இந்தி எதிர்ப்பு தீர்மானத்தை மேற்கு வங்கம், கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்கள் தங்கள் மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்ற தயாராகி வருகின்றனர். இந்தி பேசினால் மட்டுமே எதிர்காலம் என்ற பொய் பரப்புரையை பா.ஜ.க. மேற்கொண்டு வருகிறது. ஆனால் இந்தி பேசக்கூடிய மக்கள் தமிழகத்திற்கு அதிக அளவு வேலைக்கு வருகின்றனர். மேலும் உலகிலேயே அதிக சம்பளம் வாங்கக்கூடிய சுந்தர் பிச்சை தி.மு.க. ஆட்சி காலத்தில் கல்வி கற்று ஆங்கிலம் தெரிந்ததால் தற்போது அதிக சம்பளம் வாங்கி வருகிறார்.

தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ரவி பா.ஜ.க.காரர்களைப் போல பேசி வருகிறார். ஆளுநரை திரும்ப பெறக்கூடிய மனுவை குடியரசுத் தலைவரிடம் வழங்கி இருக்கிறோம். குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம்.

சட்டமன்றத்தில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானம் கொண்டு வரும்போது அதிலிருந்து தங்களை காத்துக்கொள்ள சபாநாயகர் மீது குறை கூறி அ.தி.மு.க. வெளிநடப்பு செய்துள்ளது. ஆனால் அவர்களை குறைக்கூற போவதில்லை. ஏனென்றால் பெரும்பாலான அ.தி.மு.க.வினர் தி.மு.க.விற்கு வந்து கொண்டிருப்பதாகவும் விரைவில் எடப்பாடி பழனிசாமியே வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஆனால் பதவி கொடுத்தவர்களையே காட்டிக்கொடுத்த அவரை தி.மு.க. சேர்த்துக் கொள்ளாது. அ.தி.மு.க. எப்போது இருந்தாலும் தி.மு.க.விற்கு பங்காளிதான், ஆனால் பா.ஜ.க. தி.மு.க.விற்கு மட்டுமல்ல நம் இனத்திற்கே பகையாளி.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News