தமிழ்நாடு

குமரி மாவட்ட வனப்பகுதிக்குள் நுழைய முயன்ற அரிசிக்கொம்பன் யானை

Published On 2023-06-08 06:38 GMT   |   Update On 2023-06-08 06:38 GMT
  • ஜி.பி.எஸ். கருவி மூலம் அறிந்த வனத்துறையினர் உடனடியாக களக்காடு சரகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
  • களக்காடு, திருக்குறுங்குடி வனத்துறை ஊழியர்கள் யானை சென்று கொண்டிருந்த இடத்திற்கு விரைந்து சென்றனர்.

களக்காடு:

தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்ட அரிசிக்கொம்பன் யானையை வனத்துறையினர் மயக்க ஊசி போட்டு பிடித்து நேற்று முன்தினம் பிற்பகலில் நெல்லை மாவட்டத்துக்கு லாரியில் கொண்டு வந்தனர்.

பின்னர் அந்த யானையை மணிமுத்தாறு வன சோதனைச்சாவடி, மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு வழியாக மேல் கோதையாறு அணை பகுதியில் கொண்டு விட்டனர். அங்கிருந்து வன ஊழியர்கள் மேற்பார்வையில் அடர்ந்த வனப்பகுதியான முத்துக்குழி வயல் பகுதியில் யானை விடப்பட்டது. அந்த யானையின் நடமாட்டத்தை கண்டுபிடிக்க வனத்துறையினர் அதன் காதில் ரேடார் கருவியை பொருத்தியிருந்தனர். அதன்மூலம் யானையின் இருப்பிடம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது. மயக்க மருந்து செலுத்தியதில் இருந்து மீளாத அந்த யானை முத்துக்குழி வயல் பகுதியில் தனக்கான வாழ்விடத்தில் இருந்து வந்தது.

இந்நிலையில் மயக்கத்தில் இருந்து முழுமையாக மீண்ட அரிசிக்கொம்பன் இன்று அதிகாலை கோதையாற்றில் இருந்து சற்று தொலைவில் உள்ள குட்டியாறு வனப்பகுதியில் நடமாடியது. ஆனால் அதன்பின்னர் அந்த யானை மேற்கு திசையில் அதாவது குமரி மாவட்டம் பேச்சியாறு அணை வனப்பகுதியை நோக்கி வேகமாக சென்றது. இதனை ஜி.பி.எஸ். கருவி மூலம் அறிந்த வனத்துறையினர் உடனடியாக களக்காடு சரகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து களக்காடு, திருக்குறுங்குடி வனத்துறை ஊழியர்கள் யானை சென்று கொண்டிருந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் யானையை மீண்டும் குட்டியாறு வனப்பகுதிக்கு விரட்டி விட்டனர். தொடர்ந்து அவர்கள் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News