ராமேசுவரம், பாம்பன் மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்கு செல்ல தடை: இறால் மீன்கள் ஏற்றுமதி பாதிப்பு
- தடை காரணமாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
- ரூ.3 கோடி மதிப்பிலான இறால் மீன்கள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
ராமேசுவரம்:
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் கடந்த 2 நாட்களாக சூறைக்காற்று வீசி வருகிறது. காற்றின் வேகம் 45 முதல் 65 கிலோ மீட்டர் வரை உள்ளது.
இதனால் கடல் சீற்றமாக காணப்படுகிறது. இந்த நிலையில் மீனவர்களின் பாதுகாப்பு கருதி ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, தொண்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறையினர் தடை விதித்தனர். மேலும் மீன்பிடி அனுமதி சீட்டும் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் கடலில் சூறைக்காற்று வீசுவதாலும், கடல் சீற்றம் குறையாததாலும் 2-வது நாளாக இன்றும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, தொண்டி உள்ளிட்ட பகுதிகளில் 1,650-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.
தடை காரணமாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.3 கோடி மதிப்பிலான இறால் மீன்கள் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.