மேட்டூர் அணை நீர்மட்டம் 103.53 அடியாக உயர்ந்தது
- மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.
- நீர் திறப்பை விட வரத்து அதிகமாக உள்ளதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், அதன் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு உள்ளிட்ட பகுதிகளிலும் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.
இந்த பகுதியில் தற்பொழுது விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 4,605 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு 5,727 கன அடியாக அதிகரித்தது.
இன்று நீர்வரத்து சற்று குறைந்து விநாடிக்கு 5,253 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. நீர் திறப்பை விட வரத்து அதிகமாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 103.31 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 8 மணி அளவில் 103.53 அடியாக உயர்ந்தது.