தமிழ்நாடு செய்திகள்

புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு நீர்வரத்து குறைந்தது- அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு

Published On 2022-11-03 15:55 IST   |   Update On 2022-11-03 15:55:00 IST
  • புழல் ஏரிக்கு 2 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 391 கன அடியாக குறைந்து உள்ளது.
  • பலத்த மழை இல்லாவிட்டால் புழல், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பை நிறுத்த அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

திருவள்ளூர்:

சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் உள்ளன. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக இந்த 2 ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

இதனால் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடு வென உயர்ந்தது. தொடர்ந்து பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து நேற்று மாலை உபரி நீர் திறக்கப்பட்டது.

முதலில் 100 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. பின்னர் 2 ஏரிக ளிலும் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.

இன்று காலை நிலவரப்படி புழல் ஏரியில் இருந்து 292 கன அடி தண்ணிர் வெளியேற்றப்படுகிறது. இதேபோல் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 198 கன அடி நீர் வெளியேறி வருகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை முதல் பலத்த மழை இல்லாததால் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு நீர்வரத்து குறைந்து உள்ளது.

புழல் ஏரிக்கு 2 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 391 கன அடியாக குறைந்து உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மி.கன அடி. இதில் 2,726 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. 21.20 அடி நீர்மட்டத்தில் 18.58 அடிக்கு தண்ணீர் உள்ளது.

இதேபோல் செம்பரம்பாக்கம் ஏரிக்கு 1180 கன அடியாக இருந்த நீர்வரத்து 811 கன அடியாக குறைந்து இருக்கிறது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மி.கன அடி. இதில் 2,817 மி.கன அடி தண்ணீர் உள்ளது. ஏரியின் 24 அடி நீர்மட்டத்தில் 20.80 அடிக்கு தண்ணீர் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது.

தொடர்ந்து பலத்த மழை இல்லாவிட்டால் புழல், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பை நிறுத்த அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். ஏரிகளுக்கு நீர்வரத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். உபரி நீர் வெளியேறும் கரையோரத்தில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News