தமிழ்நாடு

ஓட்டு பெட்டி காவல் பணியில் அரசியல் கட்சியினர்: சுழற்சி முறையில் 24 மணி நேரமும் விழிப்புடன் இருக்கிறார்கள்

Published On 2024-04-23 10:27 GMT   |   Update On 2024-04-23 10:27 GMT
  • ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமிராக்களும் பொருத்தப்பட்டுள்ளது.
  • பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தினமும் ரூ.500 முதல் ரூ.1000 வரை ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.

சென்னை:

தமிழகத்தில் கடந்த 19-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.

வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் 39 தொகுதிகளிலும் ஸ்டிராங்ரூமில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் துணை ராணுவ படையினரின் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது. ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை தேர்தல் அதிகாரிகளும் ரோந்து சென்று வருகிறார்கள். ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமிராக்களும் பொருத்தப்பட்டுள்ளது.

இவ்வளவு கட்டுக்காவல் இருந்தாலும் அரசியல் கட்சிகளும் தங்கள் சார்பில் தொண்டர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி இருக்கிறது. சுழற்சி முறையில் பணி அமர்த்தப்பட்டுள்ள தொண்டர்கள் 8 மணி நேரத்துக்கு ஒருமுறை மாறி மாறி காவல் இருக்கிறார்கள்.

இந்த வகையில் தி.மு.க. மற்றும் பா.ஜனதா சார்பில் தலா 9 பேர் வீதம் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அ.தி.மு.க. சார்பில் 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தினமும் ரூ.500 முதல் ரூ.1000 வரை ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. மேலும் உணவு, தண்ணீர் பாட்டில் நொறுக்கு தீனிகளும் வாங்கி கொடுக்கிறார்கள்.

மொத்தம் 44 நாட்கள் பாதுகாப்பு பணியில் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒவ்வொரு வேட்பாளருக்கும் சுமார் ரூ.3 லட்சம் வரை செலவாகலாம் என்கிறார்கள் கட்சிக்காரர்கள்.

Tags:    

Similar News