தமிழ்நாடு

சவுக்கு சங்கர் வீட்டில் போதைப்பொருள் சோதனை: போலீசார் அதிரடி

Published On 2024-05-10 06:05 GMT   |   Update On 2024-05-10 06:58 GMT
  • மதுரவாயலில் உள்ள வீடு, தி.நகரில் உள்ள அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
  • சவுக்கு சங்கர் காரில் கஞ்சா இருந்தது குறித்து கோவை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் தற்போது சோதனை நடத்தப்படுகிறது.

சென்னை:

தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த சவுக்கு சங்கர், போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பெண் போலீஸ் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அவர் மீது கோவையை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா என்பவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் கடந்த 4-ந்தேதி தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் வைத்து சவுக்குசங்கரை கைது செய்தனர்.

இதற்கிடையே தேனியில் வைத்து சவுக்கு சங்கரை கைது செய்தபோது, அவரது காரில் இருந்து கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாகவும் சவுக்கு சங்கர் மீது பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் அவரை அன்றைய தினமே கோவை அழைத்து வந்து கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில் சென்னையில் யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மதுரவாயலில் உள்ள வீடு, தி.நகரில் உள்ள அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

கஞ்சா பரிமாற்றம் தொடர்பாக, நீதிமன்ற உத்தரவுப்படி தேனி போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர். மதுரவாயல் தாசில்தார், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் மதுரவாயல் போலீசார் உடன் உள்ளனர்.

சவுக்கு சங்கர் காரில் கஞ்சா இருந்தது குறித்து கோவை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் தற்போது சோதனை நடத்தப்படுகிறது.

இதற்கிடையே சென்னையில் தொடர்ந்த வழக்குகள் தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார்.

Tags:    

Similar News