தமிழ்நாடு செய்திகள்

ஐகோர்ட் மதுரை கிளை

ஆடல்-பாடல் நிகழ்ச்சியின்போது ஆபாச ஆடைகள் அணியக்கூடாது: மதுரை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

Published On 2022-11-05 14:26 IST   |   Update On 2022-11-05 14:26:00 IST
  • கரகாட்ட நிகழ்ச்சியில் ஆபாச நடனம் ஆடக்கக்கூடாது. நாகரிகமான உடைகளை அணிய வேண்டும். .
  • நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் குட்கா பொருட்களையோ, மதுபானத்தையோ உட்கொள்ளக் கூடாது.

மதுரை:

மதுரை மாவட்டம் மேலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாரிச்சாமி எபவர் மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

மதுரை மாவட்டம் மேலப்பட்டி கிராமத்தில் உள்ள மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. இந்த திருவிழாவில் வருகிற 8-ந்தேதி இரவு கரகாட்ட நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளோம். இதுகுறித்து உரிய அனுமதி கோரி காவல் துறையிடம் மனு சமர்ப்பித்துள்ளோம். எனவே கரகாட்டம் நடத்த அனுமதியும், நிகழ்ச்சிக்கு போதிய போலீஸ் பாதுகாப்பும் வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி சத்திகுமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, கரகாட்டம் நடத்துவதற்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.

கரகாட்ட நிகழ்ச்சியில் ஆபாச நடனம் ஆடக்கக்கூடாது. நாகரிகமான உடைகளை அணிய வேண்டும். நிகழ்ச்சியில் இரட்டை அர்த்த பாடல்கள் இடம் பெறக்கூடாது.

எந்த ஒரு அரசியல் கட்சி, மதம், சமூகம் அல்லது சாதியை குறிப்பிடும் விதத்தில் பாடல்களோ அல்லது நடனமோ இருக்கக்கூடாது. சாதி அடிப்படையில் எந்த பாகுபாடும் இருக்கக்கூடாது. நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் குட்கா பொருட்களையோ, மதுபானத்தையோ உட்கொள்ளக் கூடாது.

நிகழ்ச்சி இரவு 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே நடத்த வேண்டும் என கடுமையான நிபந்தனைகளை விதித்து அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

Tags:    

Similar News