தமிழ்நாடு

கோவையில் வடமாநில வாலிபர்களை தாக்கிய கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைது- போலீசார் அதிரடி நடவடிக்கை

Published On 2023-03-13 06:13 GMT   |   Update On 2023-03-13 06:15 GMT
  • தாக்குதலுக்குள்ளான 5 வடமாநில வாலிபர்களும் ஒன்று சேர்ந்த வெரைட்டிஹால் ரோடு போலீசில் புகார் செய்தனர்.
  • புகாரின் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கோவை:

கோவை, திருப்பூர் மாவட்டத்தில் ஏராளமான வட மாநில வாலிபர்கள் தங்கியிருந்து பனியன் கம்பெனி, மற்றும் தொழிற்சாலைகளில் வேலை பார்த்து வருகிறார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வட மாநில வாலிபர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. இதைத்தொடர்ந்து வடமாநில வாலிபர்கள் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்வதாகவும் கூறப்பட்டது.

இதையடுத்து தமிழக அதிகாரிகள் மற்றும் போலீசார் வடமாநில வாலிபர்கள் வேலைபார்க்கும் நிறுவனங்கள் அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இங்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை, ஏதாவது பிரச்சினை இருந்தால் உடனடியாக புகார் தெரிவிக்கும்படி அறிவுறுத்தினர்.

போலீசார் மற்றும் அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக வடமாநில வாலிபர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்வது குறைந்தது. இந்தநிலையில் கோவையில் நேற்று வடமாநில வாலிபர்கள் தாக்கப்பட்டனர். அவர்களை தாக்கியவர்களை போலீசார் உடனடியாக கைது செய்தனர்.

இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

வட மாநிலத்தை சேர்ந்தவர் கவுதம் சியாமல் கட்டுவா (வயது 33). இவர் இடையர் வீதியில் தங்கி இருந்து தங்க நகை பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அவருடன் தன்மைய் ஜனா, ஜகாத் ஆகியோரும் வேலை செய்து வருகின்றனர்.

நேற்று இரவு இவர்கள் 3 பேரும் மகாளியம்மன் கோவில் வீதி அருகே நின்று கொண்டு பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக 4 வாலிபர்கள் குடிபோதையில் வந்தனர்.

அவர்கள் தகாத வார்த்தைகளால் பேசி கவுதம் சியாமல் கட்டுவா, தன்மைய் ஜனா ஆகியோரை தாக்கினர். பின்னர் அங்கு இருந்து தப்பிச் சென்றனர். இதனை தொடர்ந்து அவர்கள் காந்திபார்க் அருகே பானிபூரி சாப்பிட்டு கொண்டு இருந்த வடமாநில வாலிபர்களான மோனா, ஷேக் தவான் ஆகியோரையும் தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.

தாக்குதலுக்குள்ளான 5 வடமாநில வாலிபர்களும் ஒன்று சேர்ந்த வெரைட்டிஹால் ரோடு போலீசில் புகார் செய்தனர். புகாரின் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் வட மாநில வாலிபர்களை தாக்கியது. செட்டிவீதியை சேர்ந்த சூர்ய பிரகாஷ் (19), பிரகாஷ் (20) கல்லூரி மாணவர் பிரகதீஸ் (21) வேல்முருகன் (20) என்பது தெரிய வந்தது. பின்னர் போலீசார் தலைமறைவாக இருந்த 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் குடிபோதையில் தெரியாமல் தாக்கி விட்டதாக தெரிவித்தனர்.

பின்னர் போலீசார் கல்லூரி மாணவர் உள்பட 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News