என்.ஐ.ஏ. சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து 5 இடங்களில் சாலை மறியல்- கடும் போக்குவரத்து பாதிப்பு
- கோவையில் தேசிய செயற்குழு உறுப்பினர் இஸ்மாயிலை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர்.
- அண்ணமார் பெட்ரோல் பங்க் அருகே 10-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு:
தமிழகம் முழுவதும் இன்று தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) போலீசார் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் உள்ள தலைமை அலுவலகம், கோவை என பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கோவையில் தேசிய செயற்குழு உறுப்பினர் இஸ்மாயிலை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்த கைது நடவடிக்கை கண்டித்தும், சோதனையை கண்டித்தும் ஈரோடு மாநகர் பகுதியில் இன்று ஒரே நேரத்தில் 5 இடங்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கடும் போக்குவரத்து பாதிப்பு நிலவியது.
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் என்.ஐ.ஏ அதிகாரிகளின் கைதி நடவடிக்கையையும், சோதனை நடவடிக்கையும் கண்டித்து திடீரென பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் 10-க்கும் மேற்பட்டோர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இது குறித்து தகவல் கிடைத்ததும் டவுன் போலீசார் விரைந்து வந்து மறியல் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.
இதேபோல் அண்ணமார் பெட்ரோல் பங்க் அருகே 10-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஈரோட்டில் இருந்து செல்லக்கூடிய வாகனங்களும், வெளியூரிலிருந்து ஈரோட்டுக்கு வரக்கூடிய வாகனங்களும் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இவர்களையும் போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் ஈரோடு மணிக்கூண்டு, கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே, பி.பி. அக்ரஹாரம் பகுதிகளிலும் ஒரே நேரத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் தனித்தனி குழுவாக பிரிந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் இந்த பகுதிகளிலும் கடும் போக்குவரத்து பாதிப்பு நிலவியது. இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் இன்று ஈரோடு மாநகர் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பொதுமக்கள் அதிக கூடும் இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.