தமிழ்நாடு செய்திகள்

விபத்தில் பலியான நண்பர்கள் 3 பேரையும் காணலாம்.

சாயல்குடி அருகே ஆம்னி வேன் மீது மோதல்: ஒரே மோட்டார் சைக்கிளில் சென்ற நண்பர்கள் 3 பேர் பலி

Published On 2023-09-07 09:22 IST   |   Update On 2023-09-07 09:22:00 IST
  • நண்பர்களான மூன்று பேரும் ஒன்றாகவே வெளியில் சென்று வருவது வழக்கம்.
  • விபத்தில் பலியான 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கடலாடி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சாயல்குடி:

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகேயுள்ள கடுகுசந்தை சத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சோனைமுத்து மகன் இசேந்திரன் (17), முனியசாமி மகன் அன்பரசன் (20) மற்றும் சண்முகவேல் மகன் லிங்கேஸ்வரன் (22).

நண்பர்களான இவர்கள் மூன்று பேரும் ஒன்றாகவே வெளியில் சென்று வருவது வழக்கம். நேற்று இரவு மேலசெல்வனூர் கிராமத்தில் கோவில் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஆடல் பாடல் நிகழ்ச்சியை பார்க்க செல்ல முடிவெடுத்தனர்.

இதையடுத்து 3 பேரும் தங்களது பெற்றோரிடம் கூறிவிட்டு, ஒரே இருசக்கர வாகனத்தில் நேற்று இரவு மேல செல்வனூர் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.

அவர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் சாத்தங்குடி விலக்கு அருகே சென்றபோது, எதிரே ராமநாதபுரம் புத்தேந்தல் கிராமத்தில் இருந்து வந்துகொண்டிருந்த ஆம்னி வேன் மீது மோதியது. அடுத்த விநாடி அந்த மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது.

இந்த விபத்தில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே இசேந்திரன், அன்பரசன் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலத்த காயமடைந்து லிங்கேஸ்வரன் உயிருக்கு போராடினார்.

இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் 108 ஆம்புலன்ஸ் வேன் மூலம் லிங்கேஸ்வரனை ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அவர் செல்லும் வழியில் ஆம்புலன்ஸ் வேனிலேயே இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. மேலும் ஆம்னி வேன் டிரைவர் பாலமுருகனும் பலத்த காயம் அடைந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தில் பலியான 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கடலாடி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து கடலாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே கிராமத்தை சேர்ந்த நண்பர்கள் 3 பேரும் விபத்தில் பலியானது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News