தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணை நீர்மட்டம் 50.50 அடியாக உயர்வு

Published On 2023-10-27 09:04 IST   |   Update On 2023-10-27 09:04:00 IST
  • தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அதே போல் கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டது.
  • கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 99.48 அடியாக இருந்தது.

சேலம்:

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததாலும், கர்நாடக அணைகளில் இருந்து உரிய தண்ணீர் திறந்து விடாததாலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது.

இந்த நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த 10-ந் தேதி 30 அடியாக குறைந்தது. இதனால் குடிநீர் மற்றும் மீன் வளத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.

இதற்கிடையே தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அதே போல் கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து காணப்பட்டது.

இதன் காரணமாக கடந்த 10-ந் தேதி 30 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 50.50 அடியாக உயர்ந்தது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரத்து 855 கனஅடியாக அதிகரித்து காணப்பட்டது.

குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து தொடர்ந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பாசனத்துக்கு திறக்கப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்ட நிலையில் நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 99.48 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 531 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து கால்வாய் மற்றும் குடிநீருக்காக வினாடிக்கு 567 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதேபோல் கபினி அணைக்கு வினாடிக்கு 258 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் 300 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News