மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,570 கனஅடியாக சரிவு
- மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 12,000 கனஅடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 400 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
- மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததாலும், கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததாலும், ஒகேனக்கல் காவிரி மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்து வருகிறது.
ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் 4 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை அதேஅளவில் நீடித்தது. இதேபோல் மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 3017 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு 2,009 கனஅடியானது.
இன்று காலை நிலவரப்படி மேலும் சரிந்து, விநாடிக்கு 1,570 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 12,000 கனஅடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 400 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
நீர்வரத்தை காட்டிலும், நீர்திறப்பு அதிகளவில் உள்ளதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று 114.84 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று 114.20 அடியாக சரிந்தது.