தமிழ்நாடு செய்திகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம் சூறை- ஈபிஎஸ் கண்டனம்

Published On 2024-06-15 09:43 IST   |   Update On 2024-06-15 11:59:00 IST
  • ஒரு கட்சியின் அலுவலகம் தாக்கப்படுவது என்பதே இந்த விடியா திமுக ஆட்சியில் சீர்கெட்ட சட்டம் ஒழுங்கிற்கு அத்தாட்சி.
  • ஜாதிய தீண்டாமையால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வது வேதனைக்குரியது.

நெல்லையில் சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததால் ஆத்திரமடைந்த பெண் வீட்டார் மார்க்சிஸ்ட் அலுவலத்தை சூறையாடியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மார்க்சிஸ்ட் அலுவலகத்திற்கு பெண் வீட்டாரை சேர்ந்த 30 பேர் நுழைந்து அடித்து நொறுக்கியுள்ளனர்.

பட்டியலினத்தை சேர்ந்த இளைஞருக்கும், மாற்று சாதியை சேர்ந்த பெண்ணுக்கும் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது.

பின்னர், சாதி மறுப்பு திருமணம் செய்த பெண்ணை தங்களுடன் அழைத்து செல்ல பெண் வீட்டார் வந்ததால் மோதல் ஏற்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை பெண் வீட்டை சேர்ந்த ஏராளமானோர் அடித்து நொறுக்கிய நிலையில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

9 பிரிவுகளில் வழக்குப்பதிந்த பெருமாள்புரம் காவல் நிலைய போலீசார் 13 பேரை கைது செய்து மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது,

ஜாதி மறுப்பு திருமணம் நடத்தியதற்காக திருநெல்வேலி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் சூறையாடப்பட்டுள்ள சம்பவத்திற்கு எனது கடும் கண்டனம்.

தேசிய கட்சி அங்கீகாரம் பெற்ற ஒரு கட்சியின் அலுவலகம் தாக்கப்படுவது என்பதே இந்த விடியா திமுக ஆட்சியில் சீர்கெட்ட சட்டம் ஒழுங்கிற்கு அத்தாட்சி.

சுயமரியாதை இயக்கம் தழைத்தோங்கிய தமிழ்நாட்டில், இன்றளவும் ஜாதிய தீண்டாமையால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வது வேதனைக்குரியது.

நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தைத் தாக்கியவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு விடியா திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

Tags:    

Similar News