தமிழ்நாடு

ஐகோர்ட் மதுரை கிளை

காசியின் தந்தைக்கு ஜாமீன் வழங்கியது மதுரை ஐகோர்ட்டு

Published On 2022-08-24 09:40 GMT   |   Update On 2022-08-24 09:40 GMT
  • காசி தொடர்பான வழக்குகள் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டன.
  • காசிக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.

மதுரை:

நாகர்கோவில் கோட்டார் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் காசி (வயது 27). இவர் மீது சென்னையை சேர்ந்த பெண் என்ஜினீயர், நாகர்கோவிலை சேர்ந்த இளம்பெண் ஆகியோர் பாலியல் புகார் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து கடந்த 2020-ம் ஆண்டு காசியை கைது செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் காசி மீது மேலும் பல பெண்கள் புகார் கொடுத்தனர். அதன் அடிப்படையில் பாலியல் தொல்லை உள்ளிட்ட 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

போலீசாரின் விசாரணையில் அவர் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் இளம்பெண்களுடன் சமூக வலைதளங்கள் மூலம் பழகி காதலிப்பதாக ஏமாற்றி, பண மோசடி செய்தது மட்டுமின்றி பாலியல் தொல்லை கொடுத்து, அதனை வீடியோ எடுத்து மிரட்டியது தெரிய வந்தது.

இதையடுத்து காசி தொடர்பான வழக்குகள் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டன. சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையில் காசி பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. மேலும் அவரது லேப்டாப்பில் நூற்றுக்கணக்கான இளம்பெண்களின் ஆபாச வீடியோக்கள் மற்றும் படங்கள் இருந்தன.

இந்த வழக்கில் காசிக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். மேலும் வழக்கு தொடர்பான தடயங்களை அழித்ததாக காசியின் தந்தை தங்கபாண்டியனும் கைது செய்யப்பட்டார்.

காசி மற்றும் அவரது தந்தை ஜெயிலில் அடைக்கப்பட்டனர். தனக்கு ஜாமீன் வழங்குமாறு மதுரை ஐகோர்ட்டில் காசியின் தந்தை தாக்கல் செய்த மனுக்கள் 2 முறை தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த நிலையில் ஜாமீன் கேட்டு மீண்டும் அவர் மனுதாக்கல் செய்தார். அந்த மனு மதுரை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, காசியின் தந்தை தங்கபாண்டியனுக்கு ஜாமீன் வழங்கினார். மேலும் அவர் சாட்சிகளை மிரட்டக்கூடாது, சாட்சிகளை கலைக்கும் நோக்கில் செயல்பட கூடாது, விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

Similar News