கிருஷ்ணா நீர் திறப்பு பூண்டி ஏரிக்கு நிறுத்தம்
- கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பை நிறுத்தி உள்ளனர்.
- பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு இணைப்பு கால்வாய் வழியாக வினாடிக்கு 240 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
செம்பரம்பாக்கம்:
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றும் முக்கிய ஏரியாக பூண்டி ஏரி உள்ளது. இதில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம். கிருஷ்ணாநீர் திட்டத்தின் படி ஆந்திரா அரசு வருடம் தோறும் தமிழகத்திற்கு 12 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி., ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி. எம். சி. தண்ணீரை பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும்.
அதன்படி கடந்த நவம்பர் 28-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதிகபட்சமாக வினாடிக்கு 2 ஆயிரத்து 100 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை மற்றும் மாண்டாஸ் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பலத்த மழை கொட்டியது. இதனால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. பூண்டி ஏரிக்கும் தண்ணீர் வரத்து அதிகமானது. ஆந்திராவிலும் பலத்த மழை பெய்ததால் நீர்வரத்து அதிகமாகி பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பியது.
போதுமான தண்ணீர் இருப்பு உள்ளதால் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறப்பை நிறுத்தும்படி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதினர்.
இதனை ஏற்று கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பை நிறுத்தி உள்ளனர். பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இன்று காலை 6 மணி நிலவரப்படி நீர்மட்டம் 33.68 அடியாக பதிவானது. 2.724 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு இணைப்பு கால்வாய் வழியாக வினாடிக்கு 240 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 38 கன அடி விதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
நவம்பர் 28-ந் தேதியில் இருந்து நேற்று இரவு வரை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 3½ டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.