தமிழ்நாடு

கொடநாடு வழக்கு: சயானுக்கு மீண்டும் சம்மன் அனுப்ப போலீசார் முடிவு

Published On 2024-01-11 11:39 GMT   |   Update On 2024-01-11 11:39 GMT
  • கேரளாவை சேர்ந்த சயானிடம் விசாரணை நடத்துவதற்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் முடிவு செய்தனர்.
  • கோவை காந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்டது.

கோவை:

நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் உள்ள மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017-ல் கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது.

இந்த சம்பவம் தொடர்பாக தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சி.பி.சி.ஐ.டி போலீசார் இதுவரை 500க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

மேலும் இது தொடர்பாக இடைக்கால விசாரணையை அறிக்கையையும் தாக்கல் ஊட்டி கோர்ட்டில் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கேரளாவை சேர்ந்த சயானிடம் விசாரணை நடத்துவதற்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் முடிவு செய்தனர்.

இதற்காக அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சி.பி.சி.ஐ.டி போலீசார், இன்று (11-ந் தேதி) ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி இருந்தனர்.

இதையடுத்து அவர் இன்று கோவை காந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்டது.

சயானிடம் விசாரணை நடத்த உள்ளதால் இந்த வழக்கில் மேலும் சில முக்கிய தகவல்கள் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இன்று சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு சயான் ஆஜராகவில்லை என அவரது தரப்பில் இருந்து சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சயான் கேரளாவில் மற்றொரு வழக்கில் இன்று விசாரணைக்கு ஆஜராக உள்ளதாகவும், அதன் காரணமாக அவரால் இன்று கொடநாடு வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சி.பி.சி.ஐ.டி போலீசார் சயானிடம் வேறு ஒரு நாளில் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக அவருக்கு விரைவில் மீண்டும் சம்மன் அனுப்பவும் திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

Tags:    

Similar News