தமிழ்நாடு

முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி தொடர்ந்த அ.தி.மு.க. உள்கட்சி தேர்தலுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

Published On 2022-09-19 08:46 GMT   |   Update On 2022-09-19 10:35 GMT
  • கே.சி.பழனிசாமி தரப்பு வக்கீல், மனுதாரர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து தமக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கவில்லை என்பதால், அந்த நீக்கம் செல்லாது என கூறினார்.
  • மனுதாரர் தரப்பு வக்கீல், அ.தி.மு.க. உட்கட்சி தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதாக கூறினார்.

சென்னை:

அ.தி.மு.க. உட்கட்சி தேர்தல் 2021-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த தேர்தலை ரத்து செய்யக்கோரி அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பு வக்கீல், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட ஒருவர் உட்கட்சி விவகாரம் குறித்து வழக்கு தொடர முடியாது என்பதால் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதிலளித்த கே.சி.பழனிசாமி தரப்பு வக்கீல், மனுதாரர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து தமக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கவில்லை என்பதால், அந்த நீக்கம் செல்லாது என கூறினார்.

இந்த மனு எப்படி விசாரணைக்கு உகந்தது என கேள்வி எழுப்பிய நீதிபதி இந்த விவகாரம் தொடர்பாக வேறு நீதிமன்றத்தில் மனு நிலுவையில் உள்ளதா? என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு வக்கீல், அ.தி.மு.க. உட்கட்சி தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதாக கூறினார்.

இதனையடுத்து உத்தரவு பிறப்பித்த நீதிபதி, உட்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர மனுதாரருக்கு தகுதியில்லை என்பதால் அவரது மனுவை தள்ளுபடி செய்வதாக கூறினார்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக கீழமை நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை அந்தந்த நீதிமன்றங்கள் விசாரித்து முடிவெடுக்கலாம் என நீதிபதி சி.வி. கார்த்திகேயன் தனது உத்தரவில் தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News