வரதராஜபுரம் பகுதியில் அடையாறு ஆற்றில் வெள்ளத்தடுப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு
- அடையாறு ஆற்றில் வரதராஜபுரம் தடுப்பணை, அடையாறு ஆற்றின் கிளையாற்றில் சோமங்கலம் கதவணை அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன.
- வெள்ளத்தடுப்பு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
காஞ்சிபுரம்:
கடந்த 2015-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது பெய்த கனமழையால் அடையாறு ஆற்றின் கரையோர பகுதிகளான ஆதனூர், வரதராஜபுரம், முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்ததால் அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். இதையடுத்து அடையாறு ஆற்றின் கரையோர பகுதிகளில் மீண்டும் வெள்ளநீர் சூழாமல் இருக்க வெள்ளத்தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் அடையாறு ஆற்றின் கிளைக்கால்வாய்கள் தூர்வா ரப்பட்டு சீரமைக்கப்பட்டது.
அடையாறு ஆற்றுக்கு அதிகப்படியான மழைநீர் வருவதை தடுக்கும் வகையில், குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒரத்தூர் பகுதியில் ஒரத்தூர் மற்றும் ஆரம்பாக்கம் ஏரிகளை இணைத்து நீர் தேக்கம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் அடையாறு ஆற்றில் வரதராஜபுரம் தடுப்பணை, அடையாறு ஆற்றின் கிளையாற்றில் சோமங்கலம் கதவணை அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன.
இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடையாறு ஆற்றில் நடைபெற்று வரும் வெள்ளத்தடுப்பு பணிகளையும், வரதராஜபுரம் பகுதியில் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ள இடத்தில் அடையாறு ஆற்றை அகலப்படுத்தவும் வரதராஜபுரம் புவனேஷ்வரி நகர் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலம், வரதராஜபுரம் பகுதியில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் மூடிய வெள்ள வடிகால் வாய்கள் அமைக்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் ஆர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், வெள்ளத்தடுப்பு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் சைலேந்திரன், நீா்வளத்துறை செயற்பொறியாளர் செல்வ ராஜ், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் அருண், நீா்வளத்துறை உதவி பொறியாளர் குஜராஜ் உடன் இருந்தனர்.