தமிழ்நாடு

நெல்லை மாவட்டத்தில் 2 கல்குவாரிகளில் வருமான வரித்துறை அதிரடி சோதனை

Published On 2023-02-14 06:24 GMT   |   Update On 2023-02-14 06:24 GMT
  • வருமான வரித்துறை அதிகாரிகள் ஆற்றங்கரை பள்ளிவாசல் மற்றும் அரியநாயகிபுரத்தில் உள்ள கல்குவாரியில் சோதனை நடத்தினர்.
  • நெல்லை மாவட்டத்தில் கல்குவாரிகளில் சோதனை நடைபெறுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை:

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு சொந்தமான திருமண மண்டபங்கள், கல்குவாரிகள், செங்கல் சூளைகள், 100-க்கும் மேற்பட்ட லாரிகள் மார்த்தாண்டத்தில் செயல்பட்டு வருகிறது.

மேலும் நெல்லை மாவட்டம் ஆற்றங்கரை பள்ளிவாசல் மற்றும் முக்கூடல் அருகே உள்ள அரியநாயகிபுரத்திலும் இவருக்கு சொந்தமான கல்குவாரிகள் இயங்கி வருகிறது.

இந்நிலையில் இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆற்றங்கரை பள்ளிவாசல் மற்றும் அரியநாயகிபுரத்தில் உள்ள கல்குவாரியில் சோதனை நடத்தினர். இதையொட்டி குவாரிகளுக்கு முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

குவாரிகளில் ஆய்வு செய்யும் வருமானவரித்துறை அதிகாரிகள் அங்கு கற்களை எடுத்து செல்வதற்கான அனுமதி சீட்டுகள் மற்றும் குவாரிகளின் உரிமங்கள் ஆகியவற்றின் ஆவணங்களை ஆய்வு செய்து வருகிறார்கள்.

தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இன்று 60-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில் நெல்லை மாவட்டத்தில் கல்குவாரிகளில் சோதனை நடைபெறுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News