தமிழ்நாடு செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த முனைய பணி 2025-ம் ஆண்டில் முடிவடையும்

Published On 2022-12-24 12:06 IST   |   Update On 2022-12-24 12:06:00 IST
  • சென்னை விமான நிலையத்தை விரிவாக்கம் பணிக்காக இந்திய விமான நிலைய இயக்குனரகம் சுமார் ரூ.2467 கோடி ஒதுக்கி உள்ளது.
  • 95 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டதாகவும், ஒரு சில மாதத்தில் அது திறக்கப்படும் என்றும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறி உள்ளனர்.

ஆலந்தூர்:

சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு விமான நிலையம், வெளிநாட்டு விமான நிலையம் என 2 முனையங்கள் செயல்பட்டு வருகிறது.

இந்த விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு இந்திய விமான இயக்குனரகம் முடிவு செய் தது. அதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் இது சர்வதேச விமான நிலையம் என்பதால் நவீன வசதிகளுடன் சர்வதேச தரம் வாய்ந்ததாக இருக்கும் வகையில் புனரமைக்கப்பட்டு வருகிறது.

தற்பொழுது சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையம் டெர்மினல் 1-ல் செயல்பட்டு வருகிறது. டெர்மினல் 2-ல் தற்போது விமான நிலைய விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது. டெர்மினல் 3-ல் சர்வதேச விமான நிலையம் வருகை பகுதியாகவும், டெர்மினல-4 சர்வதேச புறப்பாடு பகுதியாகவும் செயல்பட்டு வருகிறது.

சென்னை விமான நிலையத்தை விரிவாக்கம் பணிக்காக இந்திய விமான நிலைய இயக்குனரகம் சுமார் ரூ.2467 கோடி ஒதுக்கி உள்ளது.

சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு முனையம் மற்றும் உள்நாட்டு முனையத்திற்கு இடையே டெர்மினல்-2 விரிவாக்க பணி தற்போது வேகமாக நடந்து வருகிறது. 95 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டதாகவும், ஒரு சில மாதத்தில் அது திறக்கப்படும் என்றும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறி உள்ளனர்.

இது பயன்பாட்டிற்கு வந்த பின், தற்போது சர்வ தேச வருகை பகுதியாக செயல்பட்டு வரும் டெர்மினல்-3 முழுவதுமாக இடிக்கப்பட்டு அதற்கான வேலை தொடங்கப்படும். இதனை 2025-ம் ஆண்டுக்குள் முடிக்க இந்திய இயக்குனரகம் முடிவு செய்துள்ளது.

அதன் பின்னால் டெர்மினல்-1 மற்றும் டெர்மினல்-4 ஆகிய இரண்டு டெர்மினலும் உள்நாட்டு விமான நிலையமாகவும், டெர்மினல் இரண்டு மற்றும் மூன்று சர்வதேச விமான நிலையமாகவும் செயல்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

இதுகுறித்து விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறும்போது, "சென்னை விமான நிலையத்தில் 2025-ம் ஆண்டு ஒருங்கிணைந்த விமான முனையம் திறக்கும்போது அதில் சுமார் 33 தானியங்கி நுழைவாயிலும், 20 ஏரோ-பிரிட்ஜ்களும் இருக்கும். இது பயணிகளை கையாளுவதற்கு எளிதாகவும், வேகமாகவும் அமையும். இந்த பணிகள் தாமதமாவதற்கு காரணம் விமான நிலையம் எல்லையை ஒட்டியுள்ள நிலங்களை கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதமும் கொரோனா தொற்றும் ஆகும்.

கடந்த 2 ஆண்டுகளாக மழையின் காரணமாகவும் இந்த பணிகளை சரியாக செய்து முடிக்க முடியவில்லை. வருகிற 2025-ம் ஆண்டுக்குள் இந்த பணிகள் முழுவதும் முடிக்கப்பட்டு ஆண்டுக்கு 3½ கோடி பயணிகளை கையாளும் வகையில் ஒருங்கிணைந்த சென்னை விமான நிலையம் திறக்கப்படும்" என்றார்.

Tags:    

Similar News