தமிழ்நாடு செய்திகள்

நடிகர் வடிவேல் பட பாணியில் '7 குளத்தை காணவில்லை' என்று தொழிலாளி தர்ணா போராட்டம்

Published On 2023-04-11 12:13 IST   |   Update On 2023-04-11 12:13:00 IST
  • பொன்னேரி அருகே உள்ள பூதூர் ஊராட்சியில் உள்ள 7 குளங்கள் ஆக்கிரமிப்பாளர்களால் மாயமாகி இருப்பதாக கூறப்படுகிறது.
  • டீக்கடை நடத்தி வரும் சிவக்குமார் என்பவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு கொடுத்தார்.

பொன்னேரி:

நடிகர் வடிவேல் நடித்த ஒரு நகைச்சுவை காட்சியில் இல்லாத கிணற்றை கண்டுபிடித்து தருமாறு போலீசாரிடம் புகார் செய்வார்.இந்த காமெடி அனைவராலும் ரசிக்கப்பட்டது.

இதேபோல் பொன்னேரி அருகே பயன்பாட்டில் இருந்த 7 குளத்தை காணவில்லை என்று தொழிலாளி ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொன்னேரி அருகே உள்ள பூதூர் ஊராட்சியில் உள்ள 7 குளங்கள் ஆக்கிரமிப்பாளர்களால் மாயமாகி இருப்பதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அதேபகுதியில் டீக்கடை நடத்தி வரும் சிவக்குமார் என்பவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு கொடுத்தார். அனால் குளத்தை மீட்பது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது.

இந்த நிலையில் சிவக்குமார் பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அவர் வழக்கம்போல் மாயமான 7 குளத்தை மீட்க வேண்டும் என்ற அங்குள்ள அதிகாரிகளிடம் தெரிவித்தார். ஆனால் இதனை அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ள வில்லை என்று கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து சிவக்குமார், பூதூரில் 7 குளங்களை காணவில்லை என்று கையில் பதாகை ஏந்திய படி கோட்டாட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அந்த பதாகையில் குளத்தின் சர்வே எண்ணையும் குறிப்பிட்டு இருந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் சிவக்குமார் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதுகுறித்து சிவக்குமார் கூறும்போது, பூதூர் ஊராட்சியில் 15க்கும் மேற்பட்ட குளங்கள் இருந்தன. அதில் சர்வே எண். (36), (38) ,(42), (74) (188) ,(342) ,(344) அடங்கிய ஏழு குளங்கள் கடந்த 5 ஆண்டுகளில் அடுத்தடுத்து ஆக்கிரமிப்பால் மாயமாகிவிட்டன. இதுபற்றி ஏற்கனவே பலமுறை வட்டாட்சியர் முதல் மாவட்ட கலெக்டர் வரையிலும், முதல்-அமைச்சரின் தனி பிரிவுக்கும் புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் எனக்கு மிரட்டல்களும் வருகின்றன. இது பற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

Tags:    

Similar News