தமிழ்நாடு

5 ஆண்டுகளாக உத்தரவை நிறைவேற்றாத கல்வி அதிகாரிக்கு 2 வாரம் சிறை: மதுரை ஐகோர்ட் தீர்ப்பு

Published On 2023-08-01 07:58 GMT   |   Update On 2023-08-01 07:58 GMT
  • கல்வி அதிகாரி சாமி சத்தியமூர்த்தி நேரில் ஆஜரானார்.
  • 2018-ம் ஆண்டில் ஐகோர்ட்டு உத்தரவிட்டும் அதை இத்தனை ஆண்டுகளாக செயல்படுத்தாதது ஏன்? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மதுரை:

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை அடுத்த சருகனியில் நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பணியாற்றிய தையல் ஆசிரியை இடமாற்றம் செய்யப்பட்டதால் அந்த இடத்துக்கு புதிய ஆசிரியை நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரது நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கும்படி பள்ளியின் தாளாளர் சிவகங்கை மாவட்ட கல்வி அதிகாரிக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் அதிகாரிகள் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருந்தனர்.

இதனால் கடந்த 2015-ம் ஆண்டில் பள்ளி தாளாளர் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தையல் ஆசிரியை நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

அந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, சருகணி நடுநிலை பள்ளியில் தையல் ஆசிரியை நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கும்படி உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவை கல்வி அதிகாரிகள் முறையாக செயல்படுத்தவில்லை.

இதையடுத்து கோர்ட்டு உத்தரவை நிறைவேற்றாத மாவட்ட கல்வி அதிகாரி சாமி சத்தியமூர்த்தி மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த 2019-ம் ஆண்டில் அவமதிப்பு மனு தாக்கல் செய்தார். இந்த மனு ஏற்கனவே பலமுறை விசாரணைக்கு வந்து நிலுவையில் இருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கல்வி அதிகாரி சாமி சத்தியமூர்த்தி நேரில் ஆஜரானார். (அவர் தற்போது ஓய்வு பெற்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது).

அப்போது, ஏற்கனவே 2018-ம் ஆண்டில் ஐகோர்ட்டு உத்தரவிட்டும் அதை இத்தனை ஆண்டு களாக செயல்படுத்தாதது ஏன்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, இதற்காக சாமி சத்தியமூர்த்திக்கு 2 வாரம் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது என்றும் உத்தரவிட்டார்.

இதைக்கேட்ட அரசு வக்கீல், இந்த தண்டனையை தற்போது நிறுத்தி வைக்க கோரியதால், கல்வி அதிகாரிக்கு விதித்த தண்டனை 2 வாரத்திற்கு நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

Similar News