தமிழ்நாடு

சி.விஜயபாஸ்கர்

குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர்களை விசாரிக்கலாம்- சிபிஐக்கு தமிழக அரசு அனுமதி

Published On 2022-07-23 08:41 GMT   |   Update On 2022-07-23 11:08 GMT
  • குட்கா ஊழல் தொடர்பாக பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன
  • முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா உள்ளிட்டோரிடம் சிபிஐ விசாரணை நடத்த உள்ளது

சென்னை:

சென்னையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக, அமைச்சர்கள், ஐபிஎஸ் அதிகாரிகள், வணிக வரித்துறை அதிகாரிகள் மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு லஞ்சம் தரப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள், பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

2017ம் ஆண்டு முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர். பின்னர் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

2018-ம் ஆண்டு இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேர் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் முதல் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர். 2-வது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய தயாராகிவருகின்றனர்.

இந்நிலையில், குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா உள்ளிட்ட 12 பேரிடம் விசாரணை நடத்துவதற்கு அனுமதி அளிக்கும்படி தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம் எழுதியது.

இதையடுத்து, குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்த சிபிஐக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, சென்னை காவல் ஆணையர்களாக இருந்த ராஜேந்திரன், ஜார்ஜ் உள்ளிட்ட 12 பேரிடம் விசாரணை நடத்த உள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் குட்கா வழக்கு மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. 

Tags:    

Similar News