தமிழ்நாடு செய்திகள்

மிச்சாங் புயல் கரையை கடந்த நிலையில் 4 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற மீனவர்கள்

Published On 2023-12-06 10:32 IST   |   Update On 2023-12-06 10:32:00 IST
  • மிச்சாங் புயல் கரையை கடந்த நிலையில் மீன்பிடிக்க செல்ல விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது.
  • வெறிச்சோடி கிடந்த ராமேசுவரம் மீன்பிடி துறைமுகம் இன்று காலை முதல் களை கட்டத்தொடங்கியது.

ராமேசுவரம்:

வங்கக்கடலில் உருவான மிச்சாங் புயல் காரணமாக மீனவர்களின் பாதுகாப்பு கருதி ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல கடந்த சனிக்கிழமை முதல் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை தடை விதித்து இருந்தது.

இதனால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம், சோளியகுடி, தொண்டி, கீழக்கரை, ஏர்வாடி, மூக்கையூர் உள்ளிட்ட பகுதிகளில் 1,650-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மீன்பிடிக்க கடந்த நான்கு நாட்களாக செல்லாமல் அந்தந்த துறைமுங்களிலேயே பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே மிச்சாங் புயல் கரையை கடந்த நிலையில் மீன்பிடிக்க செல்ல விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பல்வேறு துறைமுகங்களில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகளிடம் மீன்பிடிக்க செல்ல அனுமதி டோக்கன் பெற்று கடலுக்கு உற்சாகத்துடன் மீன்பிடிக்க சென்றனர்.

4 நாட்களுக்கு பிறகு மீண்டும் கடலுக்கு செல்வதாக அதிகப்படியான மீன் பாடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இதனால் வெறிச்சோடி கிடந்த ராமேசுவரம் மீன்பிடி துறைமுகம் இன்று காலை முதல் களை கட்டத்தொடங்கியது.

Tags:    

Similar News