தமிழ்நாடு செய்திகள்

நடுவானில் பெண் பயணிக்கு திடீர் நெஞ்சு வலி- சென்னையில் அவசரமாக தரை இறங்கிய சவுதி அரேபியா விமானம்

Published On 2022-12-18 14:26 IST   |   Update On 2022-12-18 14:26:00 IST
  • சென்னை விமான நிலையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஜமீலா பிந்தி சேர்க்கப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
  • மற்ற 375 பயணிகளுடன், சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம், இன்று அதிகாலை கோலாலம்பூருக்கு புறப்பட்டு சென்றது.

ஆலந்தூர்:

சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் இருந்து, மலேசிய நாட்டு தலைநகர் கோலாலம்பூருக்கு சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம், 378 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.

அந்த விமானத்தில் மலேசிய நாட்டைச் சேர்ந்த ஜமீலா பிந்தி (வயது58) என்ற பெண், அவரின் குடும்ப உறுப்பினர்கள் 2 பேருடன் பயணித்துக் கொண்டிருந்தார். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, பயணி ஜமீலா பிந்திக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.

இதையடுத்து விமானத்திற்குள் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவருக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை இருந்தது.

இதனால் விமானி, உடனடியாக ஏதாவது ஒரு விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்க முடிவு செய்தார். அந்த நேரத்தில் விமானம், சென்னை வான்வெளியை கடந்து சென்று கொண்டிருந்து. உடனே விமானி அவசரமாக, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு, மருத்துவ சிகிச்சைக்காக, விமானத்தை அவசரமாக தரை இறங்க அனுமதி கேட்டார்.

இதையடுத்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் உடனடியாக விமானத்தை சென்னையில் தரையிறங்க அனுமதிப்பதோடு, அந்த பயணிக்கு மருத்துவ சிகிச்சைக்கும் தேவையான ஏற்பாடுகள் செய்யும்படி உத்தரவிட்டனர்.

இதையடுத்து சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம், நேற்று இரவு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரை இறங்கியது.

சென்னை விமான நிலையத்தில் தயாராக இருந்த மருத்துவக் குழுவினர், விமானத்திற்குள் ஏறி பயணியை பரிசோதித்தனர். அவரை மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருந்தது. உடனே சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், ஜமீலா பிந்தி மற்றும் அவருடன் வந்த 2 பயணிகள் ஆகியோருக்கு அவசரகால மருத்துவ விசாக்கள் வழங்கினர்.

அதன்பின்பு 3 பேரையும் விமானத்தில் இருந்து கீழே இறக்கினர். சென்னை விமான நிலையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஜமீலா பிந்தி சேர்க்கப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து மற்ற 375 பயணிகளுடன், சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம், இன்று அதிகாலை கோலாலம்பூருக்கு புறப்பட்டு சென்றது. இதனால் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News