தமிழ்நாடு

தாளவாடி மலைப்பகுதியில் மின்சாரம் பாய்ந்து யானை பலி- விவசாயி அதிரடி கைது

Published On 2022-12-12 04:30 GMT   |   Update On 2022-12-12 04:30 GMT
  • பிரேத பரிசோதனை முடிவில் யானை மின்சாரம் பாய்ந்து உயிர் இழந்தது தெரிய வந்தது.
  • ஜீரகள்ளி வனத்துறையினர் விவசாயி மாதேவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. தாளவாடி மலைப்பகுதியில் உள்ள ஜீரகள்ளி வனச்சரகம், மல்லன்குழி வனப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் ஒரே பகுதியில் முகாமிட்டுள்ளன.

இந்நிலையில் கடந்த 9-ந் தேதி மல்லன் குழி கிராமத்தில் விவசாயி மாதேவா என்பவரது விவசாய தோட்டத்திற்கு அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் பள்ளத்தின் அருகே ஒரு காட்டு யானை இறந்து கிடப்பதை அப்பகுதி விவசாயிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து உடனடியாக ஜீரகள்ளி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் யானை உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.இதில் இறந்தது சுமார் 35 முதல் 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை என்பது தெரிய வந்தது. பெண் யானை உடல் நலக்குறைவால் இறந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பதை கண்டறிய வனத்துறையினர் கால்நடை மருத்துவர் மூலம் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பிரேத பரிசோதனை முடிவில் யானை மின்சாரம் பாய்ந்து உயிர் இழந்தது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் விசாரணை நடத்தியதில் அருகே உள்ள விவசாய நிலத்தின் உரிமையாளர் மாதேவா அவரது தோட்டத்தில் வன விலங்குகள் புகாமல் இருக்க அமைத்திருந்த மின் வேலியில் உயர் அழுத்தம் மின்சாரம் பாய்ச்சியதும், காட்டு யானை அந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்திருப்பதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து ஜீரகள்ளி வனத்துறையினர் விவசாயி மாதேவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News