தமிழ்நாடு

கன்னியாகுமரி தொகுதி, விளவங்கோடு தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம்

Published On 2024-03-27 06:24 GMT   |   Update On 2024-03-27 07:20 GMT
  • எடப்பாடி பழனிசாமி பிரசாரத்திற்கு வருகை தந்துள்ளதையடுத்து அ.தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
  • அ.தி.மு.க. தொண்டர்களின் வருகையால் நாகர்கோவில் நகரில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

நாகர்கோவில்:

தமிழகத்தில் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பசலியான் நசரேத், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ராணி ஆகியோரை ஆதரித்து இன்று (27-ந்தேதி) பிரசாரம் செய்கிறார். இதற்காக அவர் நேற்றிரவு கன்னியாகுமரி வந்தார். அவரை கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. வரவேற்றார்.

கன்னியாகுமரியில் உள்ள விடுதியில் எடப்பாடி பழனிசாமி தங்கி உள்ளார். இன்று மாலை 4 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் நடைபெறும் கூட்டத்தில் வேட்பாளர்கள் பசலியான் நசரேத், ராணியை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். இந்த நிகழ்ச்சியில் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. மற்றும் கூட்டணி கட்சிகளான தே.மு.தி.க., புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ., பார்வர்ட் பிளாக், புரட்சி பாரதம் உட்பட கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி பிரசாரத்திற்கு வருகை தந்துள்ளதையடுத்து அ.தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர். இன்று மாலை நடைபெறும் பிரசார கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் மதியமே தொண்டர்கள் வர தொடங்கினார்கள். மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் ஏராளமான தொண்டர்கள் நாகராஜா திடலுக்கு வந்தனர். இதையடுத்து அவர்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அ.தி.மு.க. தொண்டர்களின் வருகையால் நாகர்கோவில் நகரில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

எடப்பாடி பழனிசாமி நாகர்கோவிலில் பிரசாரத்தை முடித்துவிட்டு இரவு சங்கரன்கோவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

Tags:    

Similar News