தமிழ்நாடு

அமராவதி ஆற்றின் நடுவே பாறை மீது ஒய்யாரமாக அமர்ந்திருந்த முதலையை காணலாம்.

உடுமலை அருகே அமராவதி ஆற்றில் உலா வரும் முதலைகள்: பொதுமக்கள் அச்சம்

Published On 2023-11-08 04:36 GMT   |   Update On 2023-11-08 04:36 GMT
  • அமராவதி அணை மற்றும் ஆறு உள்ளிட்ட பகுதியில் முதலைகள் உலா வருவது தொடர் கதையாக உள்ளது.
  • அமராவதி ஆற்றில் உலா வருகின்ற முதலையை பிடித்து உரிய முறையில் பராமரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடி வாரத்தில் அமராவதி அணை உள்ளது. இந்த அணையில் இருந்து அமராவதி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர் பல்வேறு கிராமங்களின் நிலத்தடி நீர் இருப்பை உயர்த்தியும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்தும் வருகின்றது. இந்த சூழலில் அமராவதி ஆற்றில் முதலைகள் உலா வந்த வண்ணம் உள்ளன.

இதன் காரணமாக ஆற்று நீரை பயன்படுத்தி வருகின்ற பொதுமக்கள், தாகம் தீர்க்க வருகின்ற கால்நடைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளதுடன் கரையோர கிராமங்களில் அச்சம் நிலவி வருகிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், அமராவதி அணை மற்றும் ஆறு உள்ளிட்ட பகுதியில் முதலைகள் உலா வருவது தொடர் கதையாக உள்ளது. அவை இருப்பதை உறுதிப்படுத்தும் விதமாக அணையின் கரையோரம், ஆற்றுக்கு நடுவே உள்ள பாறைகளில் அவ்வப்போது வந்து மேலே ஓய்வெடுத்து விட்டு பின்பு தண்ணீருக்குள் சென்று விடுகிறது. அந்த வகையில் கல்லாபுரம் அருகே அமராவதி ஆற்றில் உள்ள பாறையில் முதலை ஒன்று ஒய்யாரமாக அமர்ந்து ஓய்வெடுத்து கொண்டிருந்தது. இதனால் ஆற்றுக்கு வருகை தந்த பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

மேலும் கரையோர கிராமங்களில் முதலைகள் உலா வந்து பிடிபட்ட சம்பவமும் நடந்துள்ளது. இதுவரையிலும் முதலைகளால் பொதுமக்கள், கால்நடைகளுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை. ஆனாலும் முதலைகள் உலா வருவதை அலட்சியப்படுத்தக் கூடாது. அவற்றின் இயல்பு குணமே உணவை வேட்டையாடி உண்பதாகும். முதலைகள் தானாக இடம் பெயர்ந்து வர இயலாது. எனவே முதலைகள் எங்கிருந்து அமராவதி ஆற்றுக்கு வந்தது. அவை எவ்வாறு கொண்டு வரப்பட்டது என்பது குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும். னவே அமராவதி ஆற்றில் உலா வருகின்ற முதலையை பிடித்து உரிய முறையில் பராமரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News