தமிழ்நாடு

கல்லூரி பஸ் சாலையில் கவிழ்ந்து கிடப்பதை காணலாம்

பெருந்துறை அருகே கல்லூரி பஸ் நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்து: 21 மாணவர்கள் காயம்

Published On 2023-11-30 05:45 GMT   |   Update On 2023-11-30 05:45 GMT
  • திருப்பூரில் இருந்து வழக்கம் போல் கல்லூரி பஸ்சில் மாணவ-மாணவிகள் ஏறி கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தனர்.
  • விபத்தில் 5 பேருக்கு பலத்த காயமும், 16 பேருக்கு லேசான காயமும் ஏற்பட்டது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த துடுப்பதியில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கல்லூரி சார்பாக பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. அதில் தினமும் மாணவ-மாணவிகள் சென்று வந்தனர்.

இந்நிலையில் இன்று காலை திருப்பூரில் இருந்து வழக்கம் போல் கல்லூரி பஸ்சில் மாணவ-மாணவிகள் ஏறி கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் அருகே உள்ள மேட்டுப்புதூரில் பஸ் வந்து கொண்டிருந்தபோது திடீரென டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து பஸ் சாலையோரம் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 15 கல்லூரி மாணவ-மாணவிகள் காயம் அடைந்தனர். இதில் 5 பேருக்கு பலத்த காயமும், 16 பேருக்கு லேசான காயமும் ஏற்பட்டது. காயமான மாணவ, மாணவிகள் பதற்றத்துடன் காணப்பட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்த மாணவ, மாணவிகளை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவ-மாணவிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News