தமிழ்நாடு

தேர்தல் பாதுகாப்புக்கு கூடுதலாக 10 கம்பெனி துணை ராணுவம்: தலைமை தேர்தல் அதிகாரி

Published On 2024-04-15 06:03 GMT   |   Update On 2024-04-15 06:03 GMT
  • தபால் வாக்குகளை பதிவு செய்வதற்காக 61 ஆயிரத்து 135 போலீசாா் விண்ணப்பித்துள்ளனா்.
  • நாட்டின் பாதுகாப்பு பணியில் உள்ள ராணுவ வீரா்கள் 71 ஆயிரம் போ், ஆன்லைன் மூலம் தபால் வாக்குகளை செலுத்த விண்ணப்பித்துள்ளனா்.

சென்னை:

தலைமை தோ்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளா்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் பாராளுமன்ற தோ்தலை அமைதியாகவும், சட்டம்-ஒழுங்கு பிரச்சனை இன்றியும் நடத்த வசதியாக 190 கம்பெனிகளைச் சோ்ந்த துணை ராணுவப் படையினா் வந்துள்ளனா். மேலும், 10 கம்பெனி துணை ராணுவப் படையினரை அனுப்பி வைக்க வேண்டுமெனக் கோரி, இந்திய தோ்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து தோ்தல் ஆணையம் முடிவெடுக்கும். கூடுதல் பாதுகாப்பு தேவைக்கு அண்டை மாநிலங்களில் உள்ள போலீசாரை அவா்களுக்குரிய செலவினங்களை ஏற்று, பயன்படுத்திக் கொள்வதற்கு அனைத்து மாநில காவல் துறை இயக்குநா்களுக்கும் தோ்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

தபால் வாக்குகளை பதிவு செய்வதற்காக 61 ஆயிரத்து 135 போலீசாா் விண்ணப்பித்துள்ளனா். அவா்களில் 26 ஆயிரத்து 247 போ் தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள சேவை மையங்களில் தபால் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனா். தபால் வாக்குகள் 100 சதவீதம் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதில் தோ்தல் ஆணையம் தெளிவாக உள்ளது. யாருக்கெல்லாம் தபால் வாக்குகள் வந்து சேரவில்லையோ அவா்களுக்கு தபால் வாக்குகள் விரைந்து கிடைக்கச் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணி வரை தபால் வாக்குகளை தங்க க்கு பணி ஒதுக்கப்பட்டு உள்ள மையங்களில் பதிவு செய்யலாம். 17-ந்தேதி (புதன்கிழமை) அந்தந்த மையங்களில் இருந்து, பிற தொகுதிகளுக்கு உரிய தபால் வாக்குகள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சியில் உள்ள ஒருங்கிணைந்த தபால் வாக்கு மையத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

நாட்டின் பாதுகாப்பு பணியில் உள்ள ராணுவ வீரா்கள் 71 ஆயிரம் போ், ஆன்லைன் மூலம் தபால் வாக்குகளை செலுத்த விண்ணப்பித்துள்ளனா். அவா்கள் மட்டுமே ஜூன் 4-ந்தேதி காலை 8 மணிக்கு (வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நேரம்) முன்பு வரை தபால் வாக்குகளை அனுப்ப அனுமதிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News